Income Tax Department New Notice; Congress action decision

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சூழலில் ரூ.1,823 கோடி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 135 கோடியை ஏற்கெனவே வருமான வரித்துறை முடக்கியுள்ள நிலையில், அடுத்தகட்டமாக ரூ. 1823.08 கோடி அபராதம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு புதியதாக மற்றொரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கடந்த 1993 - 94, 2016 - 17, 2017 - 18, 2018 - 19 மற்றும் 2019 - 20 காலகட்டத்திற்கு உரிய வருமான வரி மற்றும் அதற்குரிய அபராதத்தை செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இது குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கையில், மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு எதிராக வரி பயங்கரவாதம் நடைபெறுவதாக காங்கிரஸ்கட்சி குற்றம் சாட்டியது. பாஜக இந்திய ஜனநாயகத்தை தகர்க்கும் வேலைகளை செய்து வருவது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 8 ஆண்டு பழைய வருமான வரியை மீண்டும் ஆய்வு செய்து ரூ.1,823 கோடி வரி பாக்கியை கட்டச் சொல்வது விதிமீறல் என காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

Advertisment

Income Tax Department New Notice; Congress action decision

அதே சமயம் வருமான வரி கணக்கை மறு மதிப்பீடு செய்ய தடைகோரி காங்கிரஸ் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2014 - 15 நிதியாண்டு முதல் 2016 -17 நிதியாண்டு வரை ரூ. 1745 கோடி வருமான வரி பாக்கி இருப்பதாக புதிய நோட்டீஸை அனுப்பியுள்ளது. இதனையடுத்து வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வருமான வரி நிலுவையில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.