
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த 40 வயது நபர் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தபோது அங்கு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கோபாலன்கடை மயானத்திற்கு அவரது உடலை கொண்டு சென்ற வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினர் அவரது உடலை சவக்குழியில் வீசி, அதன்பிறகு உள்ளே தள்ளும் காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவரின் உறவினர்களுக்குகூட தெரிவிக்காமல், உரிய மரியாதை கொடுக்காமல் உடலை வீசிச் சென்ற சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமாரிடம் நாம் கேட்டபோது, "இந்த நிகழ்வு ஒரு தவறான செயல்பாடு. ஊழியர்களிடையே நிலவும் அச்ச உணர்வின் காரணமாக இதுபோன்ற ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. இதில் சுகாதாரத்துறை ஊழியர்கள் மட்டுமல்லாமல் வருவாய்த்துறை, காவல்துறை எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து செய்ய வேண்டிய ஒரு விஷயம்.

இருந்தாலும் இதில் தொடர்புடைய சுகாதாரத்துறை ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இனியும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்காக அனைத்து சுகாதார பிரிவு ஊழியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இனிமேல் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.