Incident happened to a German woman in hyderabad

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண்ணை, ஓட்டுநர்ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மங்கலகிரி சரத் சந்திர சவுத்ரி. இவர், இத்தாலியில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்த போது, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் இரண்டு பேரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி அந்த இரண்டு பேரும் சரத் சந்தர சவுத்ரியோடு, கடந்த 4ஆம் தேதி ஹைதராபாத்தை சுற்றிப் பார்க்க இந்தியா வந்துள்ளனர். சரத் சந்திர சவுத்ரியின் வீட்டில் தங்கிய அவர்கள், பல இடங்களை சுற்றுப் பார்த்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய நண்பரும் கடந்த 31ஆம் தேதி வீட்டு அருகில் உள்ள காய்கறி சந்தைக்கு வந்துள்ளனர். அப்போது காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், அவர்களிடம் நல்லவிதமாக பேசியுள்ளனர். அவர்கள் சந்தைக்கு செல்வதை அறிந்ததும், லிப்ட் தருவதாக கூறி தங்களது காரில் ஏறுமாறு அந்த கும்பல் கூறியுள்ளனர். அவர்களை நம்பிய ஜெர்மன் நாட்டினர்களும் காரில் ஏறியுள்ளனர்.

இதனையடுத்து, காரை ஓட்டிய அப்துல் அஸ்லாம் என்பவர், பாதிக்கப்பட்ட நண்பர் உள்பட மற்றவர்களை கீழே இறங்கி புகைப்படம் எடுக்குமாறு கூறிவிட்டு பாதிக்கப்பட்டவரை காரில் தனியாக அழைத்துச் சென்றுள்ளார். ஒரு ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்ற பின், அந்த ஜெர்மன் பெண்ணை மிரட்டி காருக்குள் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின், அந்த பெண்ணை காரில் ஏற்றி பழைய இடத்திற்கு அழைத்து வந்துள்ளார். அதற்குள், பாதிக்கப்பட்ட பெண் ஓடும் வாகனத்தில் இருந்து குதித்து தனது ஜெர்மன் நண்பரை சந்தித்து தனக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், அப்துல் அஸ்லாம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவரது காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.