
இந்தியாவிற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணை, ராஜஸ்தானைச் சேர்ந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார். கடந்த ஜூன் 22ஆம் தேதி டெல்லியில் இருந்து ராஜஸ்தானின் உதய்பூருக்கு வந்த அந்த பெண், அம்பமாதா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். அதனை தொடர்ந்து, நேற்று இரவு டைகர் ஹில்லுக்கு அருகில் உள்ள தி கிரேக்க பண்ணை கஃபே மற்றும் ரெஸ்ட்ரோவில் நடந்த ஒரு விருந்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது, ராஜஸ்தானைச் சேர்ந்த சித்தார்த் என்ற நபர் பாதிக்கப்பட்ட பெண் சந்தித்துள்ளார். இருவரும் நட்பாக பேசியதை அடுத்து நகரத்தை சுற்றிப் பார்ப்பதற்கு உதவுவதாகக் கூறி அந்த பெண்ணை ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு சித்தார்த் அழைத்துள்ளார்.
சித்தார்த்தின் பேச்சை நம்பி அந்த பெண்ணும், அவருடன் குடியிருப்பு பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு சென்றதும், தனது தொலைப்பேசியின் பேட்டரி காலியாகிவிட்டதாகவும், தனது ஹோட்டலுக்கு செல்ல விரும்புவதாக அந்த பெண் கூறியுள்ளார். ஆனால், அந்த பெண்ணின் பேச்சைக் கேட்காத சித்தார்த், வலுக்கட்டாயமாக அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் காயமடைந்த பெண் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஹோட்டல் ஊழியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சித்தார்த்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.