incident happened to 7-month-old girl child in kolkatta

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா நடைபாதையில் உள்ள வீட்டின் முன்பு 7 மாத குழந்தை ஒன்று அழுது கொண்டிருப்பதாக புர்டோல்லா போலீசாருக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் புகார் அளித்தார். அந்த புகாரின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த குழந்தையுடைய பெற்றோரின் அனுமதியோடு, குழந்தையை மீட்டு பரிசோதனை செய்வதற்காக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, அந்த குழந்தையின் பிறப்புறுப்பில் காயங்கள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அந்த குழந்தையின் உடலில் பல கீறல்களின் அடையாளங்கள் இருந்துள்ளன.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 7 மாத குழந்தையை நடைபாதையில் இருந்து எங்கோ தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு மீண்டும் நடைபாதைக்கே கொண்டு விட்டுவிட்டனர் என்பது தெரியவந்துள்ளது. அப்பகுதியில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். 7 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.