Skip to main content

"குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தாவிட்டால் சாலையில் சடலங்களாக இருக்கும்" - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ!

Published on 30/04/2021 | Edited on 30/04/2021

 

aam aadmi

 

இந்தியாவில் கரோனா பரவல் மோசமடைந்துள்ளது. டெல்லியிலும் கரோனா தொற்று அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் ஆக்சிஜன், படுக்கைகள், மருந்துகள் உள்ளிட்டவற்றுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் சேவையிலும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் கரோனா உயிரழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அங்குள்ள தகன மைதாங்கள் உடல்களால் நிரம்பியுள்ளதோடு, ஒரு உடலை தகனம் செய்ய 20 மணிநேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய அவலமும் ஏற்பட்டுள்ளது.

 

இந்தநிலையில், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரே, டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார். சோயிப் இக்பால் என்ற சட்டமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “டெல்லியின் நிலை குறித்து வேதனையடைந்துள்ளேன்; மிகவும் கவலைப்படுகிறேன். என்னால் தூங்க முடியவில்லை. மக்களுக்கு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் கிடைக்கவில்லை. என் நண்பர் பாதிக்கப்பட்டுள்ளார்; மருத்துவமனையில் இருக்கிறார். ஆனால் ஆக்சிஜனோ வெண்டிலேட்டரோ கிடைக்கவில்லை. அவருக்கான ரெம்டெசிவர் பரிந்துரை என்னிடம் இருக்கிறது. ஆனால் நான் அதை எங்கிருந்து பெறுவது? அவரது குழந்தைகள் அதற்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எம்.எல்.ஏ.வாக இருப்பதற்கு இன்று நான் வெட்கப்படுகிறேன். எங்களால் உதவ முடியவில்லை; அரசாங்கத்தினாலும் உதவ முடியவில்லை. நான் ஆறுமுறை எம்.எல்.ஏ.வாக இருந்தவன், மிகவும் மூத்தவன். இருந்தபோதிலும், யாரும் பதிலளிக்கவில்லை. எந்த நோடல் அதிகாரியையும் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில், டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு டெல்லி உயர் நீதிமன்றத்திடம் நான் கோர விரும்புகிறேன். இல்லையெனில் சாலையில்  சடலங்களாக இருக்கும்" என கூறியுள்ளார்.

 

சோயிப் இக்பால் கோரிக்கைக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. டெல்லி மாநில காங்கிரஸ் தலைவரும், டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு நேரடியாக கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்த சோயிப் இக்பால், 2020 சட்டமன்றத் தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவிபேட் தொடர்பான வழக்கு; உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case related to VVPAT Judgment in the Supreme Court today

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் (24.04.2024) விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா?. மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி  ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். 

Case related to VVPAT Judgment in the Supreme Court today

இதனையடுத்து, “தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்குகிறது. 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.