Skip to main content

கரோனா நிவாரண திட்டங்கள்; நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

Published on 28/06/2021 | Edited on 28/06/2021

 

NIRMALA SITHARAMAN

 

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புகள் மட்டுமின்றி பொருளாதார இழப்புகளும் இதனால் ஏற்பட்டன. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களுக்கான பல்வேறு பொருளாதார நிவாரண திட்டங்களை அறிவித்துள்ளார்.

 

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், கரோனாவால் பாதித்த துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி அளவிலான கடன் உத்தரவாதம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதேபோல, சுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடியும், பிற துறைகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடியும் கடன் உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும், மருத்துவமனைகள் உள்ளிட்ட கூட்டமைப்பு வசதிகளை அமைக்க ரூ.100 கோடி வரை கடன் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். புதிய திட்டமான கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், 25 லட்சம் பேர் வரை பயனடைவார்கள் என்ற நிதியமைச்சர், மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களால் இந்த கடன் சிறிய அளவிலான கடன் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

அதேபோல, சுற்றுலாத்துறையைப் புதுப்பிக்கும் விதமாக, சர்வதேச பயணம் மீண்டும் தொடங்கியதும், இந்தியாவுக்கு  வரும் முதல் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் விசா கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31, 2022 வரையோ அல்லது முதல் 5 லட்சம் விசாக்களை விநியோகிக்கப்படும் வரையோ இந்த திட்டம் அமலில் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா அமைச்சகம் மற்றும் மாநில அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்ட 10,700 பிராந்திய அளவிலான சுற்றுலா வழிகாட்டிகள், பயண மற்றும் சுற்றுலா பங்குதாரர்களுக்கு புதிய கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இவை மட்டுமல்லாமல், பொது சுகாதாரத்திற்காக மேலும் 23,220 கோடி அளிக்கப்படும் எனவும், குழந்தைகள் பராமரிப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் ஏழைகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அண்ணா யோஜனா திட்டம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.