Skip to main content

''இந்திய விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்'' - டெல்லி போராட்டக் களத்தில் பிஆர்.பாண்டியன் பேச்சு

Published on 25/01/2021 | Edited on 26/01/2021

 

'I apologize publicly to Indian farmers'' - PR Pandian's speech

 

வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் காசிப்பூர் பகுதிகளில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் பங்கேற்று பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அவர் பேசியதாவது,

 

மத்திய அரசு பாராளுமன்றத்தில் சட்டத்திற்கு விரோதமாக விவசாயிகளுக்கு விரோதமான விவசாய சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதனைக் கைவிட வலியுறுத்தி இந்தியா முழுமையிலும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. டெல்லியில் நடக்கிற போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம். இதற்குத் தமிழகத்தில் இருந்து விவசாயிகள் சார்பாக ஆதரவு தெரிவிப்பதற்காக இங்கே நான் வந்திருக்கிறேன். மோடி அதானிக்கும் அம்பானிக்கும் போராடுகிறார். அரசியலமைப்புச் சட்டத்தைக் காலில் போட்டு மிதிக்க முயற்சிக்கிறார். காந்தி பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தைப் பறிகொடுக்கப் போராடுகிறார்.

 

ஆனால் விவசாயிகள் நடத்துவது 120 கோடி மக்களைப் பாதுகாப்பதற்கான போராட்டம். அரசியலமைப்புச் சட்டத்தையும் காந்தி பெற்ற சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக போராட்டம் நடத்துகிறோம்.

 

குமரி முதல் காஷ்மீர் வரை ஒட்டுமொத்த இந்திய மக்களும் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். போராட்டம் வெற்றி பெறும். இந்தப் போராட்டத்தை நடத்துகிற உங்களுக்கு ஆதரவாக ஒட்டு மொத்த தமிழகமும் போராடிக் கொண்டிருக்கிறது. ஆளுநர் மாளிகை மற்றும் மத்திய அரசு மாநில அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராடி வருகிறோம். தொடர் போராட்டங்களில் 60 தினங்களாக ஈடுபட்டு வருகிறோம்.

 

அதேநேரத்தில் ஜெயலலிதா உயிரோடு இருந்திருப்பாரேயானால் இந்தச் சட்டத்திற்கு ஆதரவளித்திருக்கமாட்டார். ஆனால் அவரது மறைவையொட்டி முதல்வரான எடப்பாடி பழனிசாமி சுயநலத்திற்காக இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு மற்றும் ஆளுகிற அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி ஆதரித்தது. இதற்காக நான் வெட்கித் தலைகுனிகிறேன். இதற்காக தமிழக விவசாயிகள் சார்பில் உங்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன். சட்டத்தைக் கைவிட்டு மக்களுக்காக மோடி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையேல் மோடியை மாற்றுவதற்கு இந்திய விவசாயிகள் தயாராகி விட்டார்கள் என நான் எச்சரிக்க விரும்புகிறேன்.

 

தமிழகத்தில் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க மறுத்தும், டிராக்டர் பேரணிக்கு காவல்துறையைக் கொண்டு தடுக்கவும் அரசு முயற்சிக்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது'' என்றார்.

 

இவருடன் திருவாரூர் மாவட்டச் செயலாளர் சரவணன், மதுரை மாவட்டச் செயலாளர் மேலூர் அருண், முன்னணி நிர்வாகிகள் சுதா, தர்மலிங்கம், தவமணி, கணேசன், நாகை சபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.