husband who forced his wife to do a special pooja with a friend in Kerala

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஷெமீர் சொந்தமாக பாத்திரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு அண்மைக் காலமாக பாத்திரக்கடையில் வியாபாரம் சரிவரப் போகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஷெமீர் பலரிடமும் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். ஒருகட்டத்தில் வியாபாரத்தில் போட்ட முதல் கிடைக்காமல், பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ஷெமீர் வீட்டில் இருக்கும் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

இது குறித்து அடிவாரம் பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான பிரகாசன் என்பவரிடம் ஷெமீர் கூறி, இதற்கு எதாவது தீர்வு இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார். இதையடுத்து பிரகாசன், உனது மனைவிக்குப் பேய் பிடித்திருக்கிறது. அவரை நிர்வாண பூஜை செய்ய வைத்தால் எல்லாம் சரியாகி உனது கடன் பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிடும் என்று ஷெமீரிடம் கூறியுள்ளார். இதனையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டு வீடு திரும்பிய ஷெமீர் தனது மனைவியுடன் நண்பர் பிரகாசன் கூறியதை தெரிவித்துள்ளார்.

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, கோபப்பட்டு சத்தம் போட்டிருக்கிறார். ஆனால், விடாமல் தொந்தரவு செய்த ஷெமீர் நிர்வாண பூஜைக்கு சம்மதிக்குமாறு அவரது மனைவியை அடித்து உதைத்த் துன்புறுத்தியுள்ளார். இதனால் காயமடைந்த அவர், நடந்த சம்பவம் குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் பிரகாசன் மற்றும் ஷெமீர் இருவர் மீதும் பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

கேரள மாநிலத்தில் குடும்பம் செல்வச் செழிப்பாக இருக்க வேண்டிச் சிறப்புப் பூஜை, நிர்வாண பூஜை, நரபலி, பின்பு நரபலி கொடுத்த மனித மாமிசத்தை மனிதர்களே உண்பது போன்ற பயங்கரமான சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.