
காதலனோடு இருந்த மனைவியை கையும் களவுமாக பிடித்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவியை வலுக்கட்டாயமாக காதலனுக்கே திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், கோதாரே பகுதியில் உள்ள தான் பகதூர் திஹ் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் சந்திரா (40). இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஹரிஷ்மா (35) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஹரிஷ்மாவுக்கு சிவ்ராஜ் சவுகான் என்ற நபரோடு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (19-06-25) சந்தையில் இருந்து வீட்டுக்கு வந்த கொண்டிருந்த போது சிவராஜ் சவுகானுடன் தனது மனைவி ஹரிஷ்மா இருப்பதை ஹரிஷ் சந்திரா கண்டுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஹரிஷ் சந்திரா உடனடியாக, ஹரிஷ்மா நெற்றியில் பூசப்பட்டிருந்த குங்குமத்தை தண்ணீரைக் கொண்டு அழித்துவிட்டார். அதனை தொடர்ந்து, மனைவியையும் சிவராஜ் சவுகானையும் கிராமத்தில் இருந்து 500 மீ தொலைவில் உள்ள ஒரு கோயிலுக்கு அழைத்து சென்று அவர்களுக்கு அந்த இடத்திலேயே வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து ஹரிஷ் சந்திரா கூறுகையில், ‘அவள் என் மகனின் மருந்தில் விஷத்தை கலந்து மகனை கொலை செய்ய முயன்றார். அறுவை சிகிச்சைக்கு பிறகு நான் படுத்த படுக்கையானேன், அதன் பிறகு என் மனைவி அவரது காதலனை தொடர்ந்து சந்தித்துள்ளார். நான் அவளை கைவிட்டுவிட்டேன். இப்போது அவர்களின் திருமணத்தால் நான் திருப்தியடைகிறேன்’ என்று கூறினார்.