Husband carries wife's head covered in blood on scooty - incident that shocked the suburbs

முறையற்ற தொடர்பிலிருந்த மனைவியை கையும் களவுமாக பிடித்த கணவர் அவரை கொடூரமாக கொலை செய்து தலையை வெட்டி இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்து காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெங்களூர் புறநகர்ப் பகுதியான அனேக்கல் ஹெபகொடி பகுதியில் வசித்து வருபவர்கள் சங்கர்-மானசா தம்பதி. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு மூன்று வயதில் குழந்தை உள்ளது. தனியார் நிறுவனத்தில் சங்கர் பணியாற்றி வந்தார். இரவு வேலைக்கு சென்றிருந்த சங்கர் காலையில் வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு கிளம்பிச் சென்ற சங்கர் திடீரென பாதியிலேயே வீட்டுக்கு வந்து கதவைத் தட்டிய பொழுது மனைவியுடன் மற்றொரு நபர் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அந்த நபர் மனசாவின் முன்னாள் காதலன் முகிலன் என்பது தெரிய வந்தது. சங்கரை கண்டதும் அந்த நபர் தப்பி ஓடினார். இதில் ஆத்திரமடைந்த சங்கர் வீட்டில் இருந்த கறி வெட்டும் கத்தியால் மனைவி மனசாவை கொடூரமாக தாக்கி அவருடைய தலையை துண்டித்து இரு சக்கர வாகனத்தில் வைத்து காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார். ரத்த உடையோடு, கத்தி, மனித தலை என போலீசார் முன்னிலையில் சரணடைந்த சம்பவம் பெங்களூரு புறநகரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .