Skip to main content

குழந்தை இல்லாததால் மனைவியை எரித்துக் கொன்ற கணவர்

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

Husband arrested in wife passes away case in Mumbai

 

மஹராஷ்டிரா மாநிலம், ஜால்னா மாவட்டத்தில் உள்ள கர்லா கிராமத்தில் வசித்து வருகிறார் அமோல். இவரது மனைவி சவிதா (38). இவர்கள் இருவரும், கடந்த ஜூன் 23 ஆம் தேதி அன்று அதிகாலை 4 மணி அளவில் புல்தானா மாவட்டத்திலுள்ள கஜனன் மகாராஜ் சாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் இருவரும் காரில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று அவர்கள் வந்த கார் தீப்பற்றியது. இதில், சவிதா சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.

 

காவல்துறையினர் சவிதாவின் கணவரான அமோலிடம் விசாரித்தபோது, அவர், “சம்பவம் நடந்த அன்று நாங்கள் வந்த கார், கர்லா லோனர் சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது காருக்கு பின்னால் வந்த சரக்கு வேன் காரை மோதியது. உடனடியாக நான் காரில் இருந்து இறங்கி சரக்கு வேன் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அந்த நேரத்தில் திடீரென்று கார் தீப்பற்றி எரிந்தது. அதில் சிக்கிக் கொண்ட என் மனைவி சவிதா காரின் கதவுகளை திறக்க முற்பட்டார். ஆனால், அவரால் வெளியே வரமுடியவில்லை. அதனைத் தொடர்ந்து நான் எவ்வளவோ முயற்சி செய்தும் மனைவியை காப்பாற்ற முடியவில்லை” என்று கூறியிருந்தார். 

 

அமோல் கொடுத்த அந்த வாக்குமூலத்தில் பல்வேறு முரண்பாடுகள் இருந்தது. குறிப்பாக அவர்கள் வந்த கார் விபத்தில் சிக்கியதற்கான எந்த தடயங்களும் இல்லாததால், காவல்துறையினருக்கு அமோல் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் அமோலிடம் கிடிக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அமோல், தன்னுடைய மனைவி சவிதாவை காரில் அடைத்து தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

 

மேலும், அந்த விசாரணையில், அமோலுக்கும் சவிதாவுக்கும் திருமணமாகி 13 வருடங்கள் ஆன பின்னும் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அமோல் மனமுடைந்து இருக்கிறார். இதன் காரணமாக தனது மனைவியை அடித்து சித்ரவதை செய்துள்ளார். மேலும், ஆண் குழந்தை பெற்று தரவில்லையென்றால் சவிதாவை விவாகரத்து செய்துவிடுவேன் என்று மிரட்டி வந்திருக்கிறார். இதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.

 

இந்த நிலையில் அமோல், சவிதாவை கொலை செய்யத் திட்டமிட்டு வந்திருக்கிறார். இதனையடுத்து, கொலை நடந்த அன்று ஆள்நடமாட்டம் இல்லாத இடமான சென்காவ் - கர்லா சாலையில் தனது மனைவியை அமோல், காரில் வைத்து எரித்து கொலை செய்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. அதனையடுத்து, காவல்துறையினர் அமோல் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அமோலிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.