ADVERTISEMENT

வரலாற்றுச் சம்பவம்; நாடாளுமன்றத்திலிருந்து மேலும் 49 எம்.பி.க்கள் இடைநீக்கம்!

05:00 PM Dec 19, 2023 | mathi23

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை அவை முழுக்க வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட 14 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து வந்ததால், இந்த இரு அவைகளிலும் எந்த ஒரு விவாதமும் நடத்தப்படாமல் இருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், நேற்று (18-12-23) காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளுமே கூடியது. அப்போது நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதம் செய்ய வேண்டும் எனவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன், டி.ஆர். பாலு, ஆ. ராசா, தயாநிதி மாறன், எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தமிழச்சி தங்கபாண்டியன் உட்பட 33 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மாநிலங்களவை நேற்று (18-12-23) மாலை 4:30 மணி அளவில் தொடங்கியது. அப்போது அமளியில் ஈடுபட்ட 45 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பெயரை வாசித்த அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், குரல் வாக்கெடுப்பு மூலம் அவர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார். இதுவரை நாடாளுமன்ற வரலாற்றில் ஒரே நாளில் 78 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை. மேலும், இந்த கூட்டத்தொடரில் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 எம்.பி.க்கள் உட்பட 92 எம்.பி.க்கள் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று (19-12-23) காலை நாடாளுமன்றம் கூடியது. அப்போது, பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், 90க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்தும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அந்த வகையில், அமளியில் ஈடுபட்ட திருமாவளவன், கார்த்தி சிதம்பரம், சசி தரூர், பரூக் அப்துல்லா, டிம்பிள் யாதவ் உள்ளிட்ட 49 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, 92 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று 49 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதால் இதுவரை மொத்தமாக இந்த கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற வரலாற்றில், ஒரு கூட்டத்தொடரில் இத்தனை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஒரு வரலாற்றுச் சம்பவமாக பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT