சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் நிறுவனங்கள்தான் உலக அளவில் முதலிடத்தில் இருக்கின்றன. வாட்ஸ் ஆப்பின் தகவல்கள் பரிமாற்றம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (22.04.2021) தீர்ப்பளிக்கவிருக்கிறது. ஃபேஸ்புக்கின் குழந்தைதான் வாட்ஸ் ஆப்.இந்தச் செயலியின் பயன்பாடு உலக அளவில் 75 சதவீதமாக இருக்கிறது. தனிநபரின் தகவல்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக கடந்த ஆண்டு தனது புதிய கொள்கையை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்திருந்தது.
அதன்படி, வாட்ஸ் ஆப்பில் பகிரப்படும் தனி நபர்களின் தகவல்கள், தனது தாய் நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது வாட்ஸ் நிறுவனம். இதனை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகளின் விசாரணைகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. இந்த சூழலில், வாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கை, தொழில் போட்டியை தடுப்பதாகவேறுபட்ட குரல்களும் எதிரொலித்தன.
அது தொடர்பான சர்ச்சைகளும் எழுந்தன. இதுகுறித்து இந்திய தொழில் போட்டி ஆணையத்திடம் பல்வேறு நிறுவனங்களும் முறையீடு செய்தன. இதனை ஏற்றுக்கொண்டஆணையம், வாட்ஸ் ஆப் நிறுவனம் தொழில் போட்டியை தடுக்கிறதா என்பதை விசாரிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு வாட்ஸ் ஆப் நிறுவனத்தை டென்சன்படுத்திய நிலையில், ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக வாட்ஸ் ஆப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது. ஒத்தி வைக்கப்பட்டிருந்த அந்த தீர்ப்பு இன்று வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.