Hemant Soran claimed the right to rule

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார். இந்தச் சூழலில் இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி (31.01.2024) விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

இதனையடுத்து ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில் ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றார். இத்தகைய சூழலில் கடந்த 28 ஆம் தேதி (28.06.2024) தான் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கி அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

Hemant Soran claimed the right to rule

இந்நிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஞ்சியில் உள்ள ராஜ்பவனுக்கு வந்தார். அப்போது ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதே சமயம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

ராஜினாமா கடிதத்தை அளித்தது குறித்து ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் கூறுகையில், “சில நாட்களுக்கு முன், நான் முதல்வராக்கப்பட்டேன். அதன் மூலம் மாநில பொறுப்பு கிடைத்தது. ஹேமந்த் சோரன் திரும்பிய பின் எங்கள் கூட்டணி இந்த முடிவை எடுத்து ஹேமந்தை தேர்வு செய்தோம். இப்போது சோரனுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்” எனத் தெரிவித்தார். மேலும் ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க உரிமை கோரிய பிறகு ஹேமந்த் சோரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதல்வர் (சம்பை சோரன்) உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். எல்லாவற்றையும் விரிவாகச் சொல்வோம். இதில் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment