Skip to main content

ஹிமாச்சல பிரதேசத்தைப் புரட்டிப் போடும் கனமழை; 24 மணி நேரத்தில் 16 பேர் பலி

Published on 14/08/2023 | Edited on 14/08/2023

 

Heavy rains lash in Himachal Pradesh ;16 people died in 24 hours

 

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பருவமழை காரணமாகக் கடந்த சில மாதங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதில் பல்வேறு இடங்களில் மேக வெடிப்பு எனும் வகையில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அளவுக்கு மிஞ்சிய மழை பொழிந்து வருகிறது. இதனால் அங்கு பல இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுத் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

 

அந்த மாநிலத்தில் உள்ள சோலன் மாவட்டம் ஜாடோன் கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சோலன் மாவட்டத்தில் உள்ள மம்லிக் கிராமத்தில் மேக வெடிப்பிற்குப் பிறகு 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் 2 வீடுகளும், ஒரு மாட்டுத் தொழுவமும் அடித்துச் செல்லப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு தீயணைப்புத் துறையினர் குவிக்கப்பட்டு  மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பல இடங்களில் கடந்த 55 மணி நேரமாக இடைவிடாமல் கனமழை கொட்டி வருகிறது. அங்குள்ள மண்டி, சிர்மவுர், சிம்லா, ஹமிர்பூர், பிலாஸ்பூர் மற்றும் சோலன் ஆகிய இடங்களில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

 

அதே போல், சிம்லாவில் உள்ள சுற்றுலாத் தளமான சம்மர் ஹில் பகுதியில் உள்ள சிவன் கோவிலிலும் நிலச்சரிவு ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளது. இந்த நிலச்சரிவு பாதிப்பால் 9 பேர் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஹிமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 16 பேர் இறந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றன. இதனால், முக்கிய நெடுஞ்சாலைகள் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள 800க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், இதனால் 2000க்கும் மேற்பட்ட பேருந்து சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கனமழை அண்டை மாநிலமான உத்தரகாண்ட் மாநிலத்திலும் கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதனால்,  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பல இடங்களில்  இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் பியாஸ், பாங் அணை, ரஞ்சித் சாகர் மற்றும் சட்லஜ் நதிகளின் அருகில் உள்ள பகுதிகளில் மேக வெடிப்பு காரணமாகக் கனமழை கொட்டும் என எச்சரிக்கை கொடுத்துள்ளது.  இன்று ( 14-08-23) வரை மொத்தம் 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த சோதனையான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். மழைக் காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய உத்தரவிட்டுள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட ஆணையர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். மேக வெடிப்பு காரணமாகத் தற்போது வரை 16 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில் மேலும் பல பேர் இறந்திருக்கக் கூடும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sudden landslide in Arunachal Pradesh

அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி திபெங் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள திபெங் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 33 அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ரோயிங் - அனினி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவடடங்களில் இருந்து திபெங் மாவட்டம் தனியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்படும் வரை அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இந்த வழித்தடத்தில் பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜகவில் இணைந்த பிரியங்கா காந்தியின் ஆதரவாளர்!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Supporter of Priyanka Gandhi who joined BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய ஆதரவாளர் தஜிந்தர் சிங் பிட்டு பாஜகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சில மணி நேரங்களிலேயே இவர் பாஜவில் இணைந்துள்ளார். ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சியின் செயலாளராக பதவி வகித்து வந்த தஜிந்தர் சிங் நேற்று (20.04.2024) தனது ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் அளித்தார். அதனைத் தொடர்ந்து ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் தவுத்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்தது குறித்து தஜிந்தர் சிங் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “கடந்த 35 வருடங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தேன். இன்று அக்கட்சியில் இருந்து விலகிவிட்டேன். யாருக்கு எதிராகவும் நான் பேச விரும்பவில்லை. மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக, நான் பாஜகவில் இணைந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.