அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு கடந்த சில வருடங்களாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகே அதானியின் சொத்து மதிப்பு மிகப்பெருமளவில் உயர்ந்துள்ளதாகப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இருப்பினும் அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு தாறுமாறாக வளர்ச்சி அடைந்ததை அடுத்து உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். கடந்த சில நாட்களாக அதானி குழுமம் பங்கு சரிந்துள்ளதால் சிறிய வித்தியாசத்தில் இரண்டாம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் தான் புகழ்பெற்ற அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், இந்தியாவின் அதானி குழுமம் பங்குச் சந்தையில் ஏராளமான மோசடிகளைச் செய்துள்ளதாகவும், அக்குழுமத்திற்குப் பெருமளவில் கடன் உள்ளதாகவும் கூறி 106 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கை வெளியான நொடியிலிருந்து அதானி குழுமத்தின் பங்கு பெருமளவில் சரிந்துள்ளது. ஆய்வறிக்கை வெளியான ஜனவரி 25 ஆம் தேதி மட்டும் அதானி குழுமம் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பை இழந்தது.

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மூன்றாவது நாளாக நேற்று சரிவை சந்தித்தன. அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி வில்மர் உள்ளிட்ட பங்குகளின் விலை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் அதானிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொருளாதார பிரிவு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொருளாதார பிரிவான சுதேசி ஜக்ரன் மன்ச் ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் 'அதானி பணத்தை அழிக்கவில்லை இந்தியாவின் கட்டமைப்பை கட்டி எழுப்புகிறார்;ஹிண்டன்பர்க் அறிக்கையால் இந்தியாவின் பெயர் சர்வதேச அரங்கில் பாதிக்கப்படாது; என தெரிவிக்கப்பட்டுள்ளது.