Skip to main content

இரண்டு மாநில சோதனைகளை கடந்து கேரளாவிற்கு கடத்தப்பட்ட போதை ஹசீஷ் ஆயில்! 

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

Hashish oil recovered by kerala police two arrested

 

டிசம்பர் 2 அன்று தென்காசி மாவட்டத்தின் புளியரையை ஒட்டியுள்ள கேரளாவின் நுழைவு வாயிலான கேரள மாநிலத்தின் ஆரியங்காவு சோதனைச் சாவடியைக் கடந்து ஆந்திர மாநில வாகனத்தின் நான்கு டோர்களிலும் பதுக்கிவைத்துக் கடத்தப்பட்ட சுமார் ஒன்றரைக் கோடி மதிப்பிலான தெலுங்கான கஞ்சா 65 கிலோவைப் புனலூர் டி.ஒய்.எஸ்.பி.யான வினோத் குமாரின் டீம் சோதனையில் கைப்பற்றியது. 

 

அடுத்து டிச. 23 அன்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாரின் தகவலின்படி நகரில் விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 22 கிலோ அளவிலான 32 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு ஹெராயின் கைப்பற்றப்பட்டிருக்கிறது. தொடர்ந்து டிச. 26 அன்று தென்காசி மாவட்டத்தின் புளியரையை ஒட்டியுள்ள கேரளாவின் பத்னாபுரம் போலீசாரால் கர்நாடகாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடி மதிப்புள்ள ஒரு கிலோவிற்கும் மேற்பட்ட உயரிய போதைப் பொருளான ஹசீஷ் ஆயில் எனப்படும் போதை லேகியம் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

 

இவை அனைத்துமே தென்மாவட்ட வழிகளிலேயே பயணப்பட்டதாக சொல்லப்படுவதோடு, மூன்றே வாரத்தில் சுமார் முப்பத்தி ஐந்தரைக் கோடி மதிப்பிலான இது வரையிலும் கேள்விப்பட்டிராத அளவு போதைப் பொருள்கள் பிடிபட்டதால் தென்மண்டலம் போதைவழிச் சந்தையாகிறதா என்ற பிம்பம் ஏற்பட்டிருப்பதற்கான கருத்துக்களும் பரவலாகியுள்ளன.

 

Hashish oil recovered by kerala police two arrested

 

டிச. 26 அன்று மாலை கேரளாவின் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், கேரளாவின் புனலூரை அடுத்த பத்னாபுரம் கல்லுங்கடவுப் பகுதியில் வாகனச் சோதனையிலிருந்த பத்னாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டரான ஜெயகிருஷ்ணன் மற்றும் காவல் நிலையப் போலீசாரும் சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு வாடகைக் காரை மடக்கிச் சோதனை செய்திருக்கிறார்கள். காரினுள்ளே இருந்த இரண்டு பேரின் பையைச் சோதனை செய்ததில் கிட்டத்தட்ட ஒரு கிலோவிற்கும் மேற்பட்ட லேகியம் போன்ற கெட்டியான ஆயில் தன்மை கொண்ட பொருள் சிக்கியிருக்கிறது. சந்தேகப்பட்ட இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணனின் போலீஸ் படை, தங்கள் பாணியில் விசாரித்திருக்கிறார்கள்.

 

விசாரணையில் அது போதைத் தன்மை கொண்ட ஹசீஷ் ஆயில் என்று அவர்கள் தெரிவித்ததும் அதிர்ச்சியானார்கள். கர்நாடகாவைச் சேர்ந்த டி.ராமு(22), சிவன்குமார் (27) இருவரும் இதனை ஆந்திராவிலிருந்து தமிழகம் வரை ரயிலில் கொண்டு வந்து, பின்னர் தமிழகம் வழியாக ரயிலில் மதுரை வந்தவர்கள் அதன் பின் அங்கிருந்து செங்கோட்டை வழியாக கொல்லம் செல்லும் ரயிலில் பயணப்பட்டு, கேரளாவின் காயங்குளத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் பயணமாகி பின்னர் வாடகைக் காரில் பத்னாபுரம் கொண்டு செல்வதற்காக கல்லுங்கடவு வந்த போது சோதனையில் மாட்டிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.

 

Hashish oil recovered by kerala police two arrested

 

“வெளிநாட்டு போதைப் பொருளான ஹசீஷ்சுடன் சேர்த்து தயாரிக்கப்பட்ட கடுமையான போதைப் பொருள், ஒரு கோடிக்கும் ஜாஸ்தியான மதிப்பு. பத்னாபுரத்திலிருக்கிற ஏஜண்ட் வசம் ஒப்படைப்பதற்காக கொண்டு செல்லப்படுகிற இவர்களின் செல்போன்களை ஆய்வுசெய்கிறோம். பின்னர் தான் சரக்கு எவருக்குக் கொண்டு செல்லப்படுகிறது என்று தெரியும்” என்கிற இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன், விசாரணை நடத்தப்படுகிறது என்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.