Skip to main content

ஹரியானா கலவரம்; இணைய சேவைகள் துண்டிப்பு

Published on 02/08/2023 | Edited on 02/08/2023

 

Haryana incident Interruption of Internet Services 

 

ஹரியானாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வருகிறார். ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் அருகே உள்ள மேவாட் என்ற இடத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நேற்று முன்தினம் ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர். அப்போது ஊர்வலத்தின் போது இரு தரப்பினரிடையே வன்முறை வெடித்து பின்னர் கலவரமாக மாறியது. இதையடுத்து குழந்தைகள் உள்பட சுமார் 2,500 பேர் கோயிலில் தஞ்சமடைந்துள்ளனர். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

 

இந்த வன்முறைச் சம்பவத்தில் ஊர் காவல் படையைச் சேர்ந்த இரு காவலர்கள் உள்ளிட்ட 5 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் காவலர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து நேற்று பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தன.

 

இந்நிலையில், ஹரியானாவில் உள்ள குருகிராம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கலவரம் ஏற்பட்ட நூ மாவட்டத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளன. இணைய சேவைகளும் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. கலவரத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்து வீடுகளில் முடங்கியுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டதாக 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 44 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்