Skip to main content

"வெறுப்பை பரப்பாதீர்கள்" ஹர்பஜன் சிங் வருத்தம்...

Published on 04/01/2020 | Edited on 04/01/2020

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் பிறந்தாா். அவரது பிறப்பை போற்றும் விதமாக அவர் பிறந்த இடத்தில் சீக்கியர்களுக்கான குருத்வாரா ஒன்று கட்டப்பட்டுள்ளது.

 

harbhajan about nankana sahib issue

 

 

இதில் நேற்று நூற்றுக்கணக்கான யாத்திரீகர்கள் வழிபடு நடத்திக்கொண்டிருந்த போது, குருத்வாராவை முற்றுகையிட்ட ஒரு கும்பல் குருத்வாரா மீதும், அங்கிருந்த யாத்திரீகர்கள் மீதும் கற்களை கொண்டு தாக்கியுள்ளது. இதனால் வழிபாட்டிற்காக சென்ற சீக்கியர்கள் குருத்வாரா உள்ளேயே சிக்கிக்கொண்டு தவித்தனர்.

அப்பகுதியில் வாழும் முகமது ஹசன் என்பவர் சீக்கியப் பெண் ஜகித் என்பவரை அவரின் வீட்டில் இருந்து கடத்திச் சென்று இஸ்லாம் மதத்திற்கு மாற்றி கட்டாயத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன் காரணமாக அந்தப் பெண்ணின் சகோதரர் மன்மோகன் சிங் காவல்துறையில் புகார் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த முகமது ஹசன், தனது சகோதரன் உட்பட அப்பகுதியில் வசிக்கும் மக்களுடன் வந்து குருத்வாராவை முற்றுகையிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சீக்கிய குருதுவாராவை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்படும் என்று ஹசன் கூறியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், "சிலரால் அமைதியாகவே வாழ முடியாதா? அவர்களுக்கு என்ன ஆயிற்று என எனக்குத் தெரியவில்லை. முகமது ஹசன், ஸ்ரீ நான்கானா சாஹிப் குருதுவாராவை இடித்துவிட்டு மசூதி கட்டுவேன் என்று வெளிப்படையாகவே மிரட்டுகிறார். இதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. கடவுள் ஒருவர்தான். அவரைப் பிரிக்காதீர். ஒருவர் மீது ஒருவர் வெறுப்பைப் பரப்பாதீர். முதலில் மனிதர்களாக வாழ்வோம், ஒருவருக்கு ஒருவர் மதிப்பளிப்போம். குருதுவாராவை இடித்துவிட்டு மசூதி கட்டுவோம் என்று முகமது ஹசன் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்திருப்பது குறித்து பிரதமர் இம்ரான் கான் கவனிக்க வேண்டும். அங்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொதுமக்கள் 11 பேரைக் கடத்தி துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகளால் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
11 civilians kidnapped and and incident happened in pakistan

பாகிஸ்தான் நாட்டின் பதற்றம் நிறைந்த மாகாணம் பலுசிஸ்தான். இந்தப் பலுசிஸ்தான் பகுதியானது, ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையை ஒட்டி தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ளது.

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த நெடுஞ்சாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஒன்று அந்தப் பேருந்தை வழிமறித்துள்ளது. மேலும், அந்தப் பேருந்தில் இருந்த 9 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

அதே போல், அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனைவரது உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில், அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதியில் பிணமாக  மீட்டனர்.

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ‘நோஷ்கி மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஈரானுக்கு சென்ற ஒரு பேருந்தை வழிமறித்து, 9 பேரை கடத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணமான பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுவரை, இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை’ என்று கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.