Skip to main content

"மின் இழப்பை தடுக்கவே மின் விநியோகம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது" - ஹெச்.ராஜா பேட்டி!

Published on 05/06/2020 | Edited on 05/06/2020
HRAJA


புதுச்சேரிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி  தேசிய செயலாளர் ஹெச்.ராஜா புதுச்சேரி பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்ளுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,


"கரோனா நோய் தொற்றினால் 182 உலக நாடுகள் இன்று நரக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. மோடி அரசு கடந்த 5 ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கைகள்தான் கரோனா பாதித்த இக்கட்டான காலகட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களாக கை கொடுத்துள்ளது. ஜூலை இறுதியில் இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 கோடி இருக்கும் என்று வெளிநாட்டு பத்திரிகை எழுதியது. அதை பொய்யாக்கும் வகையில் தக்க நேரத்தில், தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதே கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதற்கும், உயிர்பலி குறைந்ததற்கும் காரணம். கொத்து, கொத்தாக உயிர்பலி ஏற்பட்டு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்ற திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்புகளிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்ட நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தை எதிர்கட்சிகள் தூண்டி விடுகின்றன. சோனியா, ராகுல், மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதற்கு துணை போகின்றனர். அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர மக்களை தூண்டி விடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசியல் செய்யக்கூடாது.

 

 


மத்திய அரசின் திட்டங்கள் எதையும் புதுச்சேரி மாநில அரசு நிறைவேற்றவில்லை. மத்திய அரசு வழங்கிய கரோனா நிதியில் 15 சதவீதம் கூட புதுச்சேரி அரசு செலவிடவில்லை. மத்திய அரசுக்கான நிதி வருவாய் குறைந்த நேரத்திலும் தமிழகத்திற்கு மட்டும் ரூ.3,760 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்கியுள்ளது.

புதுச்சேரியில் மின் இழப்பு 15 சதவீததிற்கு மேல் உள்ளது. இது 5 சதவீதத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின் விநியோகத்தில் ஏற்படும் திருட்டில் இருந்து தடுக்கவே மின் விநியோகம் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மோடி அரசு விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை தடுக்காது. அதேநேரம் மாநில அரசுகள் கொடுக்கும் எந்த வித மானியத்தையும் நிறுத்த மத்திய அரசு நிர்பந்திக்காது என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.