![HRAJA](http://image.nakkheeran.in/cdn/farfuture/G57SpThsyzSbYWcxvwTdCm8fYoUeNH-CjpJa43wzmm0/1591369133/sites/default/files/inline-images/QEQWE.jpg)
புதுச்சேரிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா புதுச்சேரி பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்ளுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
"கரோனா நோய் தொற்றினால் 182 உலக நாடுகள் இன்று நரக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. மோடி அரசு கடந்த 5 ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கைகள்தான் கரோனா பாதித்த இக்கட்டான காலகட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களாக கை கொடுத்துள்ளது. ஜூலை இறுதியில் இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 கோடி இருக்கும் என்று வெளிநாட்டு பத்திரிகை எழுதியது. அதை பொய்யாக்கும் வகையில் தக்க நேரத்தில், தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதே கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதற்கும், உயிர்பலி குறைந்ததற்கும் காரணம். கொத்து, கொத்தாக உயிர்பலி ஏற்பட்டு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்ற திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்புகளிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்ட நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தை எதிர்கட்சிகள் தூண்டி விடுகின்றன. சோனியா, ராகுல், மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதற்கு துணை போகின்றனர். அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர மக்களை தூண்டி விடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசியல் செய்யக்கூடாது.
மத்திய அரசின் திட்டங்கள் எதையும் புதுச்சேரி மாநில அரசு நிறைவேற்றவில்லை. மத்திய அரசு வழங்கிய கரோனா நிதியில் 15 சதவீதம் கூட புதுச்சேரி அரசு செலவிடவில்லை. மத்திய அரசுக்கான நிதி வருவாய் குறைந்த நேரத்திலும் தமிழகத்திற்கு மட்டும் ரூ.3,760 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்கியுள்ளது.
புதுச்சேரியில் மின் இழப்பு 15 சதவீததிற்கு மேல் உள்ளது. இது 5 சதவீதத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின் விநியோகத்தில் ஏற்படும் திருட்டில் இருந்து தடுக்கவே மின் விநியோகம் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மோடி அரசு விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை தடுக்காது. அதேநேரம் மாநில அரசுகள் கொடுக்கும் எந்த வித மானியத்தையும் நிறுத்த மத்திய அரசு நிர்பந்திக்காது என்றார்.