Advertisment

"ஆக்சிஜன் ஏற்றுமதியை 700 சதவீதம் அதிகரித்ததால் உயிரிழப்புகள்" - பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்!

priyanka gandhi

Advertisment

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதும் ஆக்சிஜனுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் நேற்று (20.07.2021) நாடாளுமன்றத்தில், "இரண்டாவது அலையில் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமான கரோனா நோயாளிகள் சாலைகளிலும் மருத்துவமனைகளிலும் இறந்தனர் என்பது உண்மையா?" எனக் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார், "கரோனா இறப்புகளைத் தெரிவிப்பதற்காக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தால் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன. அதன்படி அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கரோனா பாதிப்புகள் மற்றும் மரணங்கள் குறித்து மத்திய அரசுக்குத் தொடர்ந்து தெரிவித்து வந்தன. இருப்பினும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எந்தவொரு மரணமும் ஏற்பட்டதாக மாநிலங்களோ யூனியன் பிரதேசங்களோ தெரிவிக்கவில்லை" எனத் தெரிவித்தார்.

இதற்கு சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. சில மாநில அரசுகளும் இந்த பதிலை விமர்சித்துள்ளன. இந்நிலையில் மத்திய அரசின் இந்த பதிலை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் "ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய அரசு கூறுகிறது. உயிரிழப்புகள் எதனால் ஏற்பட்டது என்றால், பெருந்தொற்று காலத்தில் அரசு ஆக்சிஜன் உற்பத்தியை 700 சதவீதம் வரை அதிகரித்தது. ஆக்சிஜனை கொண்டு செல்ல டேங்கர்களை ஏற்பாடு செய்யவில்லை. அதிகாரக்குழு மற்றும் நாடாளுமன்ற குழுவின் அறிவுரையை அரசு புறக்கணித்தது. ஆக்சிஜன் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி அமைப்புகளை அமைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை" எனக் காட்டமாகக் கூறியுள்ளார்.

oxygen corona virus priyanka gandhi vadra
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe