governor Tamilisai said government taking steps study medicine through Tamil

Advertisment

புதுச்சேரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை கெளரவிக்கும் விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு மூத்த குடிமக்களை கெளரவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் "அனைவரும் தாய் தந்தையரை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளை வளர்க்க பெற்றோர்கள் எவ்வளவு நேரத்தை ஒதுக்குகின்றார்கள். ஆனால் வளர்ந்த பின்பு பெற்றோர்களின் பேச்சை கேட்கக்கூட பிள்ளைகள் ஒரு சில துளி நேரத்தை ஒதுக்குவதில்லை. இது வேதனையாக உள்ளது. எனது தாய், தந்தைக்கு நான் மரியாதை கொடுக்கின்றேன். மாற்றுக் கட்சியில் இருந்த என் தந்தையை மதித்து நடக்கின்றேன்.

சமீபத்தில் தமிழக அரசு எனது தந்தைக்கு வீடு ஒதுக்கியதை வைத்து என்னை விமர்சனம் செய்தார்கள். தந்தையை பாதுகாக்கவில்லை என விமர்சனம் செய்தார்கள். இதுபோன்ற விமர்சனங்களை நான் எப்போதும் பெரிதுபடுத்துவதில்லை. எனக்கு சங்கடம் கொடுக்க வேண்டாம் என அவர் வேறு முடிவெடுத்தார். இருப்பினும் மருத்துவர் கண்காணிப்பில் தற்போது பாதுகாப்பாக வைத்துள்ளேன். தாய் தந்தைக்குத்தான் முதல்மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாதுகாப்பு விதிகளைக் கடந்தும் நான் ஆளுநராக பதவி ஏற்றவுடன் மேடையின் கீழ் இருந்த தாய் தந்தையிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டுதான் மற்றவர்களிடம் வாழ்த்து பெற்றேன். ஆகவே முதியோர்களை போற்ற வேண்டும், அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், முதியோர்கள் அதிகரிப்பது ஆரோக்கியமானது அல்ல. ஏனெனில் முதுமை எல்லோருக்கும் வரக்கூடியதுதான்” என்றார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை, “புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் தமிழ் வழியில் மருத்துவ படிப்பு ஏற்படுத்தி தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விருப்பப்பட்டவர்கள் தமிழில் மருத்துவம் படிக்கலாம். இதற்காக மருத்துவ படிப்பு புத்தகங்களை தமிழில் அச்சடிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

மேலும், புதுச்சேரிக்கு கர்நாடகாவில் கனமழை காரணமாக பால்வரத்து குறைந்ததால் சிறிது தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது அதை சரிசெய்ய தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றும், தனது தந்தையை தெலுங்கானாவில் தன்னுடைய பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.