Skip to main content

‘முதல்வன்’ படப் பாணியில் அரசு எடுத்த புதிய முயற்சி! அரியணையை அலங்கரித்த 11ஆம் வகுப்பு மாணவி

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

  government school student who became collector for one day in Puducherry

 

புதுச்சேரி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மக்கள் பணிகள் செய்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'மாவட்ட ஆட்சியருடன் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணி நேற்று தொடங்கப்பட்டது. அதன்படி புதுச்சேரி கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியைச்  சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா ஒரு நாள் மாவட்ட ஆட்சியராகப் பணிக்கு அமர்த்தப்பட்டார்.

 

மாணவி ஐஸ்வர்யா காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவுடன் அவருக்கு சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் வரவேற்று அவரது இருக்கையில் அமர வைத்து அலுவல் பணிகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும், தினந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் கோப்புகள் மற்றும் புகார் மனுக்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்தும், மனுக்களைக் கொடுக்க வரும் பொதுமக்களிடம் எப்படி கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் விளக்கம் அளித்தார்.

 

தொடர்ந்து நகர பகுதியில் பல்வேறு இடங்களுக்கு மாவட்ட ஆட்சியருடன் காரில் புறப்பட்ட ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் ஐஸ்வர்யா புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து சட்டப்பேரவை அலுவலகம் வந்த ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் ஐஸ்வர்யாவை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் சால்வை அணிவித்து வரவேற்று நினைவுப் பரிசு வழங்கினார். தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள சட்டசபை மைய மண்டபத்திற்கு சென்று அங்கே நடைபெறும் சட்டசபை நிகழ்வுகள் குறித்தும், முதலமைச்சர் அமரும் இடம், எதிர்க்கட்சித் தலைவர் அமரும் இடம் ஆகியவை குறித்தும் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் விளக்கி கூறினார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், “அரசு செயல்படுத்தும் மக்கள் நலப்பணிகள் குறித்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'ஆட்சியருடன் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி மாணவி ஐஸ்வர்யா ஒரு நாள் மாவட்ட ஆட்சியராகப் பணியமர்த்தப்பட்டு அவருக்கு பல்வேறு பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது” என்றார்.

 

தொடர்ந்து பேசிய ஒரு நாள் மாவட்ட ஆட்சியரான மாணவி ஐஸ்வர்யா, “இன்று ஒரு நாள் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று பணிபுரிந்தது மறக்க முடியாத நிகழ்வு. சாதாரண பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்தும், நில அபகரிப்பு புகார்கள் குறித்தும், ஸ்மார்ட் சிட்டி சம்பந்தமான பணிகளையும் ஆய்வு செய்தேன். நன்றாகப் படித்து மாவட்ட ஆட்சியராகி மக்கள் பணி செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம். ஏதோ மாவட்ட ஆட்சியர் என்றால் கையெழுத்திடுவது மட்டும் அவருடைய வேலை அல்ல, நிறைய மக்கள் பணி உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. மேலும், மக்களிடம் எவ்வாறு கனிவோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியரைப் பார்த்து தான் அறிந்து கொண்டேன்" எனக் கூறினார். இதனையடுத்து பாதுகாவல் பணிக்கு வந்த காவலர் காரின் கதவைத் திறக்க, உள்ளே அமர்ந்த மாணவி மாவட்ட ஆட்சியருடன் புறப்பட்டுச் சென்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.