
டொமினிகா நாட்டின் உயரிய விருதான, ‘டொமினிகா அவார்ட் ஆஃப் ஹானர்’ ( Dominica award Honour) விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கொரானா தொற்றுநோய் காலத்தின் போது, டொமினிகா நாட்டிற்கு, தடுப்பூசி மருந்துகள், நிவாரணப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கி இந்தியா பல்வேறு உதவிகளை செய்தது. இந்தியாவின் இந்த செயலால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்தது. இதனால், இந்தியாவை கெளரவிக்கும் விதமாக பிரதமர் மோடிக்கு இந்த உயரிய விருதை வழங்கவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் சுகாதாரம், கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவையும், உலகளாவிய காலநிலை பின்னடைவு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை கெளரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
கயானாவின் ஜார்ஜ்டவுனில் வரும் நவம்பர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை இந்தியா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு இடையே ‘இந்தியா-காரிகாம்’ என்ற பெயரில் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், பங்கேற்கவுள்ள பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் அதிபர் சில்வானி பர்ட்டன் விருது வழங்கி கெளரவிக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து டொமினா நாட்டின் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘பிரதமர் மோடி டொமினிகாவின் உண்மையான நண்பனாக இருந்தார். குறிப்பாக உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் தேவைப்படும் நேரத்தில், அவர் அளித்த ஆதரவுக்கு நமது நன்றியின் அடையாளமாகவும், நமது நாடுகளுக்கு இடையே உள்ள வலுவான உறவுகளின் பிரதிபலிப்பாகவும் டொமினிகாவின் மிக உயர்ந்த தேசிய விருதை அவருக்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த இருநாட்டின் உறவை இன்னும் மேம்படுத்த நாங்கள் எதிர்நோக்குகிறோம்.’ என்று தெரிவித்துள்ளது.