கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசிய தகவல் கிடைத்தது.
பொதுவாக தூதரகத்திற்கு வரும் பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யமாட்டார்கள். ஆனால், இந்த தகவலை அடுத்து கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி தூதரகத்துக்கு வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலை, அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் 30 கிலோ தங்கம் இருந்துள்ளது. தூதரகத்தின் பெயரில் இவ்வளவு பெரிய தங்க கடத்தல் நடைபெற்றது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டது. மேலும், இந்த தங்க கடத்தலில் முதல்வர் அலுவலகத்திற்கு தொடர்பு உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசு இதுகுறித்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனபினராயி விஜயன், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அவரின் அந்த கடிதத்தில், "கேரள தங்க கடத்தல் வழக்கில், அனைத்து ஏஜென்சிகளையும் பயன்படுத்தி விரைந்து விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ள கடத்தலின் ஆரம்பம் முதல் அது சென்றடையும் இடம் வரையிலான அனைத்தும் முழுமையாக கண்டறியப்பட வேண்டும். குற்ற வழக்கின் அனைத்து முடிச்சுகளும் அவிழ்க்கப்பட வேண்டும். விசாரணைஏஜென்சிகளுகளுக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்" என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தங்க கடத்தல் விவகாரத்தை என்ஐஏ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.