gender reassignment without his consent in uttar pradesh

உத்தரப் பிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள சஞ்சக் கிராமத்தைச் சேர்ந்தவர் முஜாகித் (20). இவரை ஓம்பிரகாஷ் என்ற இளைஞர் கடந்த 2 ஆண்டுகளாக மிரட்டியும், துன்புறுத்தியும் வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், முஜாகித்துக்கு மருத்துவ பாதிப்பு உள்ளது என்றும், அதனால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவரிடம் ஓம்பிரகாஷ் கூறியுள்ளார்.

ஓம்பிரகாஷ் பேச்சை நம்பி, பேக்ராஜ்பூர் என்று மருத்துவக் கல்லூரிக்கு ஓம்பிரகாஷுடன் முஜாகித் சென்று சிகிச்சை மேற்கொண்டார். அப்போது, ஓம்பிரகாஷ் உதவியோடு, மருத்துவ ஊழியர்கள் முஜாகித்துக்கு மயக்க மருந்து கொடுத்து பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சிகிச்சை முடிந்ததும், சுய நினைவு திரும்பிய போது, தன்னுடைய பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டிருப்பதையும், தான் ஒரு பெண்ணாக மாறியிருப்பதைக்கண்டு முஜாகித் அதிர்ச்சியடைந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து முஜாகித்தின் தந்தை கடந்த 16ஆம் தேதி புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், பெண்ணாக மாறியிருந்த முஜாகித்திடம், ‘உன்னைப் பெண்ணாக மாற்றிவிட்டேன். நீ என்னுடன் தான் இனி வாழ வேண்டும். லக்னோவுக்கு அழைத்துச் சென்று உன்னைத்திருமணம் செய்யப்போகிறேன். ஒருவேளை அதற்கு நீ சம்மதிக்காவிட்டால், உன் தந்தையைக் கொலை செய்துவிடுவேன்’ என்று ஓம்பிரகாஷ் மிரட்டியுள்ளார் என்பது தெரியவந்தது.

Advertisment

இதனையடுத்து, வலுக்கட்டாயமாக முஜாகித்தை பாலின மாற்று சிகிச்சை மேற்கொண்ட ஓம்பிரகாஷை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவ ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.