Gaza Hospital issue Condolences to Prime Minister Modi

Advertisment

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 12 நாட்களாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த சூழலில் பாலஸ்தீனத்தின் காசா நகரில் அமைந்துள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த தாக்குதலை காசா சுகாதாரத்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. அதே சமயம் இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு மற்றும் இஸ்ரேல் ராணுவம் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் (ட்விட்டர்) வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் மற்றும் அதில் உயிரிழந்தவர்கள் குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். நடந்துகொண்டிருக்கும் இந்த போர் மோதலில் தொடர்ச்சியாக பொதுமக்கள் உயிரிழப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். இந்த தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.