Skip to main content

நூலிழையில் உயிர் தப்பிய கங்குலியின் சகோதரர்!

Published on 26/05/2025 | Edited on 26/05/2025

 

Ganguly's brother narrowly escapes boat flips in odisha

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் செளரவ் கங்குலியின் சகோதரரும், அவரது மனைவியும் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

ஒடிசாவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் செளரவ் கங்குலியின் சகோதரர் சினேகாஷிஷ் கங்குலி மற்றும் அவரது மனைவி அர்பிதா ஆகியோர் நேற்று விடுமுறையை ஒட்டி பூரி கடலில் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போது காற்று வேகமாக வீசியதால், அவர்கள் சவாரி செய்து கொண்டிருந்த படகு தடுமாறி மூழ்கியது. உயிர்காப்பாளர்கள் உடனடியாக விரைந்து வந்து அவர்கள் இருவரையும் காப்பாற்றினர். இதனால், அவர்கள் இருவரும் நூலிழையில் உயிர் தப்பினர்.

இது குறித்து அர்பிதா கங்குலி கூறுகையில், “கடல் ஏற்கனவே மிகவும் கொந்தளிப்பாக இருந்தது. படகில் 10 பேர் மட்டுமே பயணிக்க முடியும், ஆனால் பணத்தின் மீதான பேராசை காரணமாக, அவர்கள் மூன்று முதல் நான்கு பேரை மட்டுமே அதில் அனுமதித்தனர். இதுவே அன்றைய தினம் கடலுக்குள் சென்ற கடைசி படகு. கடலுக்குள் செல்வது குறித்து நாங்கள் கவலை தெரிவித்திருந்தோம், ஆனால் அது பரவாயில்லை என்று ஆபரேட்டர்கள் எங்களிடம் கூறினர். கடலுக்குள் சென்றவுடன், ஒரு பெரிய அலை படகைத் தாக்கியது. உயிர்க்காப்பாளர்கள் வந்திருக்காவிட்டால், நாங்கள் காப்பாற்றப்பட்டிருக்க மாட்டோம். நான் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறேன். 

Ganguly's brother narrowly escapes boat flips in odisha

இதுபோன்ற ஒன்றை ஒருபோதும் சந்தித்ததில்லை. படகில் அதிகமான மக்கள் இருந்திருந்தால், ஒருவேளை அது கவிழ்ந்திருக்காது. இந்த விளையாட்டுகளை அதிகாரிகள் இங்கு தடை செய்ய வேண்டும். பூரி கடற்கரையில் கடல் மிகவும் கொந்தளிப்பாக உள்ளது. நான் கொல்கத்தா திரும்பியதும், இங்கு நீர் விளையாட்டுகளை நிறுத்துமாறு கேட்டு காவல் கண்காணிப்பாளர் மற்றும் முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதுவேன்” என்று கூறினார். 

மேற்கு-மத்திய மற்றும் அருகிலுள்ள வடக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்பதால் கடலோர ஒடிசாவில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஒடிசா மாநிலத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், ஒடிசா கடற்கரையிலும் அதற்கு அப்பாலும் மணிக்கு 45 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் ஒடிசா மாநில வானிலை மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்