A gang thrash dalit man who called the shopkeeper's son 'son' in gujarat

மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையனை, ‘மகனே’ என்று அழைத்ததற்காக பட்டியலின இளைஞரை கொடூரமாகத் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஐராக்கியா கிராமத்தைச் சேர்ந்தவர் நிலேஷ் ரத்தோட் (20). பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர், கடந்த 16ஆம் தேதி அம்ரேலி-சவர்குண்ட்லா சாலையில் அருகிலுள்ள கடைக்கு சிற்றுண்டிகள் வாங்கச் சென்றுள்ளார். அப்போது கடையில் இருந்த கடைக்காரரின் மகனை, ‘பேட்டா’ (மகனே) என உதவிக்காக ரத்தோட் அழைத்துள்ளார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிறுவனை மகனே என எப்படி அழைக்கலாம் எனக் கூறி ஒரு கும்பல், நிலேஷ் ரத்தோட்டை சரமாரியாக தாக்கியுள்ளது.

Advertisment

இது குறித்து தகவல் அறிந்த நிலேஷ் ரத்தோட்டின் உறவினர்களான, லால்ஜி மன்சுக்க் சவுகான் மற்றும் சுரேஷ் வாலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால் அந்த கும்பல், ரத்தோட், சவுகான் மற்றும் சுரேஷ் வாலா ஆகியோரை குச்சிகள் மற்றும் அரிவாள்களால் கொடூரமாகத் தாக்கினர். அவர்கள் தப்பி ஓட முயன்றபோது, ​​தாக்குதல் நடத்தியவர்கள் துரத்திச் சென்று அவர்களைத் தொடர்ந்து அடித்துள்ளனர். இந்த தாக்குதலில், நிலேஷ் ரத்தோட் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் நிலேஷ் ரத்தோட் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பட்டியலின இளைஞரைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த கடைக்காரர் சோட்டா கோடா பர்வாத், விஜய் ஆனந்த் தோட்டா, பாவேஷ் முந்த்வா மற்றும் ஜதின் முந்த்வா ஆகியோர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இதுவரை, பர்வாத், டோட்டா, பாவேஷ் முந்த்வா, ஜதின் முந்த்வா, கதத் அர்ஜன் முந்த்வா, தேவ சங்கா முந்த்வா, துடா போகா முந்த்வா மற்றும் ரவி துடா முந்த்வா உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ரத்தோட்டின் மரணத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏவான ஜிக்னேஷ் மேவானி, ரத்தோட்டின் குடும்பத்தினரைச் சந்தித்து, சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை உடலைக் கோரப் போவதில்லை என்று அறிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, “பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கும் அரசு வேலை அல்லது நான்கு ஏக்கர் நிலம் வழங்க வேண்டும், அத்துடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குஜராத் பயங்கரவாதக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் குடும்பத்தினர் விரும்பும் ஒரு அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ரத்தோட்டின் உடலைக் கோர குடும்பத்தினர் கோர மாட்டார்கள்” என்று கூறினார்.