Skip to main content

பட்டியலின இளைஞர்களைக் கழிவுநீர் குடிக்க வைத்து கொடூரத் தாக்குதல் நடத்திய கும்பல்!

Published on 24/06/2025 | Edited on 24/06/2025

 

Gang shaves off dalit men and hit forcing them drink sewage water odisha

பசுக்களைக் கடத்தியதாகக் கூறி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் கழிவுநீர் குடிக்க வைத்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் ஒடிசாவில் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒடிசா மாநிலம் ஹரிபூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பட்டியலின இளைஞர்கள், தங்கள் குடும்பத்தில் நடக்கவிருந்த திருமணத்திற்கு வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட 3 பசுக்களை சிங்கிப்பூர் என்ற கிராமத்திற்கு ஏற்றிச் சென்றுள்ளனர். அவர்கள் கரிகுமா கிராமத்திற்கு வந்த போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளது. பசுக்களை படுகொலை செய்வதற்காகவோ அல்லது சட்டவிரோத விற்பனைக்காகவோ பசுக்களை ஏற்றிச் சென்றதாகக் குற்றம் சாட்டி இரண்டு இளைஞர்களை அந்த கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தினர். அவர்களின் ஆடைகளை கழற்றி அடித்து வலுக்கட்டாயமாக மொட்டை அடித்துள்ளனர். 

அதன் பின்னர், அந்த இளைஞர்களைக் கயிறுகளால் கட்டி தரையில் ஊர்ந்து செல்ல வைத்து கரிகுமா கிராமத்தில் இருந்து ஜஹாடா கிராமம் வரை கிட்டத்தட்ட இரண்டு கி.மீ தூரம் இழுத்துச் சென்றுள்ளனர். அவர்களை புல்லை உட்கொள்ள வைத்தும், கழிவுநீர் குடிக்க வைத்தும் உள்ளனர். இதனை சுற்றி இருந்த கிராமத்தினர் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த கொடூரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த கொடூரக் கும்பலிடம் இருந்து தப்பித்து, தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து காவல் நிலையத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஒடிசாவில் சாதி என்பதே இல்லை என்று கூறுபவர்களுக்கு இச்சம்பவம் ஒரு கண்ணாடி போல் காட்டுகிறது. மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி வந்ததில் இருந்து விளிம்புநிலை மக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும், அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு மீது நடத்தப்படும் தாக்குதல். சமுத்துவம், நீதி மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான சதி. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது சாதாரணமாகி விட்டது. ஏனென்றால், அவர்களுடைய அரசியலே வெறுப்பும் பிரிவினைவாதமும் தான்” என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்