Skip to main content

"வேளாங்கண்ணிக்கு இலவச புனித பயணம்" - தேர்தல் வாக்குறுதி அளித்த அரவிந்த் கெஜ்ரிவால்!

Published on 01/11/2021 | Edited on 01/11/2021

 

Arvind Kejriwal

 

பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி இந்த தேர்தல்களை எதிர்கொள்ள அந்தந்த மாநிலக் கட்சிகளும், தேசிய கட்சிகளும் முழு அளவில் தயாராகி வருகின்றன.

 

இந்தச்சூழலில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் கோவா மாநிலத்திற்கு அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணம் மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

 

இந்தநிலையில் இன்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், கோவா மாநிலத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குப் பேசிய அவர் கிறிஸ்துவர்களுக்கு வேளாங்கண்ணி செல்ல இலவச யாத்திரையை ஏற்பாடு செய்வோம் எனக் கூறியுள்ளார்.

 

Arvind Kejriwal

 

கோவாவில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது; காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஊழல் கட்சிகள். அதனால்தான் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசுவதற்கு காங்கிரஸ் துணிவதில்லை. எதிர்த்துப் பேசினால் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். கடந்த 10 ஆண்டுக்கால பாஜக ஆட்சியில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் அல்லது அமைச்சர் மீது ஏன் ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை?

 

காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் கூட்டுச் சேர்ந்து செயல்படுகின்றன. அவர்கள் ஆட்சிக்கு வரும்போது மற்றொருவர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. கோவாவில் நாங்கள் ஆட்சி அமைத்தால், இந்துக்களுக்கு அயோத்திக்கும், கிறிஸ்தவர்களுக்கு வேளாங்கண்ணிக்கும் இலவச புனித பயணத்தை ஏற்பாடு செய்வோம். முஸ்லீம்களுக்கு, அஜ்மீர் ஷெரீப்புக்கும், சாய்பாபாவை வணங்குபவர்களுக்கு ஷீரடி கோயிலுக்கும் இலவச பயணத்தை ஏற்பாடு செய்வோம். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.