
கைதாகி சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாளி எம்.பி, ஆரம்பர பொருட்களோடு சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், பல்ராம்பூர் தொகுதி முன்னாள் எம்.பியாக பொறுப்பு வகித்து வந்தவர் ரிஸ்வான் ஜாகீன். சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த இவர் மீது, கொலை, கொலை முயற்சி, ஆயுதச் சட்ட மீறல்கள் மற்றும் குண்டர் சட்ட வழக்குகள் உட்பட 14 கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. துல்ஷிபூ முன்னாள் தலைவரைக் கொலை செய்ய சதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த ஜூலை 2022ஆம் ஆண்டு ரிஸ்வான் ஜாகீன் போலீசார் கைது செய்யப்பட்டார்.
அதன்படி அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு லலித்பூர் மாவட்ட சிறையில் இருந்து வருகிறார். ரிஸ்வான் தற்போது அடைக்கப்பட்டுள்ள லலித்பூர் சிறையின் 5ஏ எண் முகாமில் நேற்று (01-06-25) திடீர் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில், சிறை விதிமுறைகளை மீறும் வி.வி.ஐ.பி வசதிகளை ரிஸ்வான் ஜாகீர் அனுபவித்து வருவது தெரியவந்தது. ஒரு தலையணையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.30,000 ரொக்கத்தையும், தேசி நெய், பிராண்டட் ஷாம்புகள், கிரீம்கள், இனிப்புகள், பிரீமியம் உணவு மற்றும் பானங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆடம்பரப் பொருட்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும், அவர் மென்மையான தலையணைகள் கொண்ட தடிமனான மெத்தையில் தூங்கிக் கொண்டிருந்தார், உணவுக்காக மட்பாண்டங்கள் வைத்திருந்தார், பேட்டரியில் இயங்கும் மின்விசிறியைக் கூட வைத்திருந்தார் என்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இந்த சம்பவம், சிறை நிர்வாகம் குறித்தும் கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான போதிலும் உயர் பதவியில் உள்ள கைதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.