former jawan's petition against modi's win in varanasi sacked

பிரதமரின் மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிராக முன்னாள் ராணுவ வீரர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த 2019 மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் பிரதமர் மோடி. அவரது வெற்றியை எதிர்த்து எல்லைப் பாதுகாப்புப் படை முன்னாள் வீரரான தேஜ் பகதூர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.வாரணாசி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட தேஜ் பகதூர், பாஜகவின் அழுத்தத்தினால் தனது வேட்பு மனுவைத் தேர்தல் ஆணையம் நிராகரித்ததாகவும், இதன் காரணமாக மோடி எளிதாக வெற்றி பெற்றுவிட்டார் என்றும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். அவரது மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், 2019ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி அன்று அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisment

இதனை அடுத்து தேஜ் பகதூர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வின் முன் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகளின் கேள்விகள் சிலவற்றிற்குப் பதிலளிக்க முடியாத மனுதாரரின் தரப்பு, விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என நீதிபதிகளிடம் கேட்டுக்கொண்டது. ஆனால் அதனை நிராகரித்த நீதிபதிகள், தொடர்ந்து விசாரணையை நடத்தி முடித்துத் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இன்று நடந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.