Skip to main content

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங் தளத்துக்கு தடை இல்லை - முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

 Former chief minister Digvijay says No ban on Bajrang Dal

 

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங் தளத்துக்கு தடை விதிக்கப்படாது. ஆனால் அதில் ரவுடிகள் மற்றும் கலவரத்தை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் திக்விஜய் சிங் கூறினார். சில மாதங்களுக்கு முன் கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக திக்விஜய் சிங் ஈடுபட்டு வந்தார். அப்போது அவர், கர்நாடகா மாநிலத்தில் பஜ்ரங் தளத்திற்கு தடை விதிக்கப்படும் என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், “ பஜ்ரங் தளத்தில் சில நல்லவர்கள் உள்ளனர். அதே நேரத்தில் அதில் ரவுடிகள் மற்றும் கலவரங்களை ஏற்படுத்துபவர்களும் உள்ளனர். இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது. ஆனால், பிரதமர் மோடி மற்றும் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் நாட்டு மக்களை பிரித்து வருகின்றனர். அதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.  நாட்டில் அமைதியை ஏற்படுத்துங்கள். அப்போது தான் வளர்ச்சி ஏற்படும்.

 

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பஜ்ரங் தளத்துக்கு தடை விதிக்கப்படுமா என்று கேள்வி கேட்கின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்படாது. ஆனால், அதில் ரவுடிகள் மற்றும் கலவரத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

 

அதனைத் தொடர்ந்து,  நாட்டில் 82 சதவீத மக்கள் இந்துக்கள், நாடு ஏற்கனவே இந்து ராஷ்டிராவாக உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் கூறியிருந்தார். இது குறித்து திக்விஜய்யிடம் செய்தியாளர்கள் தரப்பில் கேட்ட போது, ” அவர் அப்படி எதுவும் பேசவில்லை. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் சவுகான் ஆகியோர் இந்திய அரசியல் சட்டத்தின் மூலமாக பதவி ஏற்றார்களா? அல்லது இந்து ராஷ்டிரத்தின் மூலமாக பதவி ஏற்றார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை; மீட்பு பணிகள் தீவிரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
A child who fell into a borehole; Rescue operations are intense

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று நேற்று (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், “ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது.  தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ரேவா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் சோன்கர் கூறும்போது, “சிறுவனின் பெயர் மயூர். தனது நண்பர்களுடன் சேர்ந்து அறுவடை செய்த கோதுமை பயிரிடப்பட்ட வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். மற்ற குழந்தைகள் அவருக்கு உதவ முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால்  உடனடியாக மயூருடைய பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர். இது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் 3.30 மணியளவில் ஸ்டேஷன் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர் மீட்புப் பணியில் 2 ஜேசிபிகள், கேமராமேன்கள் குழு ஈடுபட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக்குழு குழு பனாரஸில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், “இந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. குழந்தையைக் காப்பாற்ற அரசு நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் செய்யும். எம்எல்ஏ சித்தார்த் திவாரி அந்த இடத்தில் இருக்கிறார். குழந்தையை மீட்கும் முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றவரை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
The forcing a man to drink urine for eloping with married woman

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றுடன் ஒருவரை, கிராம மக்கள் அடித்து துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்து, காலணி மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர், திருமணமான பெண்ணுடன் ஊரைவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவிய நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்ற அவர்களைப் பிடித்து கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இது தொடர்பான வீடியோவில், பாதிக்கப்பட்ட நபரது தலைமுடி மற்றும் மீசையின் சில பகுதிகள் மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் தாக்கியுள்ளனர். அவரை வலுக்கட்டாயமாக பாட்டிலில் இருந்து சிறுநீரை குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அவருடன் தப்பிச் சென்ற பெண்ணையும் தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘வீடியோக்கள் காவல்துறையின் கவனத்திற்கு வந்த பிறகு, நாங்கள் பாதிக்கப்பட்டவரின் வீட்டை முன்கூட்டியே தொடர்பு கொண்டோம், ஆனால் அவர் அங்கு இல்லை. பாதிக்கப்பட்ட நபருடன் நான் தொலைபேசியில் பேசினேன். அவர் எங்களை சந்திப்பார். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் சம்பவம் நடந்த இடத்தை சரிபார்த்த பிறகு, சட்ட நடவடிக்கை தொடங்கப்படும். சம்பவத்தின் பின்னணி குறித்து இன்னும் தெளிவாக இல்லை. பாதிக்கப்பட்டவருடன் பேசிய பிறகு உறுதி செய்யப்படும் என்று’ என்று கூறினர்.