கர்நாடகாவில் கடந்த ஒருவாரமாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மின்சாரப் பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் அரசுத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாகச் சாலைகளில் தேங்கி இருக்கும் நீரை அப்புறப்படுத்த நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
இதற்கிடையே பெங்களூரு விமான நிலையம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் விமான நிலையம் வரும் வாகனங்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானது. பாதி வழியில் வாகனங்களின் எஞ்சினில் தண்ணீர் புகுந்ததால் திடீரென நின்று போன சம்பவங்களும் நடைபெற்றது. இதனால் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளும், வெளியூரில் இருந்து பெங்களூர் வரும் பயணிகளும் தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் இதிலிருந்து தப்பிக்க டிராக்டரில் விமான நிலையம் வந்த சம்பவங்களும் அரங்கேறியது. இன்னும் சில நாட்களுக்குப் பெங்களூரில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.