Skip to main content

தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை!

Published on 27/04/2021 | Edited on 27/04/2021

 

five state election vote counting election commission order

 

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதேபோல் மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஏழு கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், நாளை மறுநாள் (29/04/2021) எட்டாம் மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 

அதைத் தொடர்ந்து, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படுகின்றன. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது கரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று (26/04/2021) தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, "கரோனா பரவ தேர்தல் ஆணையமே காரணம்; வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்க வேண்டும்; இல்லையென்றால் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க நேரிடும்" என்று எச்சரித்திருந்தனர். 

 

இதையடுத்து, தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (27/04/2021) உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், “கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மே 2ஆம் தேதி அன்று வாக்கு எண்ணும்போது முன்னிலை பெறும்போதும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் அரசியல் கட்சியினரின் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.