Skip to main content

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்: ஆட்சியமைக்கப்போவது யார்? - ஏபிபி- சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு வெளியீடு!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

rahul - amitshah- aravind kejriwal

 

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், இந்த ஐந்து மாநிலங்களிலும் அடுத்து ஆட்சியமைக்கப்போவது யார் என ஏபிபி ஊடகமும் சி-வோட்டர்ஸும் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளன.

 

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசத்தில் ஏபிபி - சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பின்படி, பாஜக ஆட்சியைத் தக்கவைக்கவுள்ளது. தேர்தலில் பாஜக 41.3 சதவீத வாக்குகளையும், சமாஜ்வாடி கட்சி 32 சதவீத வாக்குகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 15 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 6 சதவீத வாக்குகளையும் பெறலாம் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 

மேலும், பாஜக 241 முதல் 249 இடங்களைப் பெறும் எனவும்,  சமாஜ்வாடி 130 முதல் 138 இடங்களைப் பெறும் எனவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சி  15 முதல் 19 இடங்கள் வரையும், காங்கிரஸ் 3 முதல் 7 இடங்கள் வரையும் பெறும் எனவும் அந்தக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

 

பஞ்சாப்

பஞ்சாப் மாநில தேர்தலில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்றும், ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக உருவாகும் எனவும் ஏபிபி - சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. அம்மாநில தேர்தலில் ஆம் ஆத்மி 36 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 32 சதவீத வாக்குகளையும், ஷிரோமணி அகாலிதளம் 22 சதவீத வாக்குகளையும், பாஜக 4 சதவீத வாக்குகளையும், மற்ற கட்சிகள் 6 சதவீத வாக்குகளையும் பெறலாம் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 

சட்டமன்றத் தொகுதிகளின் அடிப்படையில் பார்க்கும்போது, ஆம் ஆத்மி 49 முதல் 55 இடங்களையும், காங்கிரஸ் 30 முதல் 47 இடங்களையும், ஷிரோமணி அகாலிதளம் 17 முதல் 25 இடங்களையும் வெல்லும் என அந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேபோல் பாஜக ஒரு சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது.

 

உத்தரகாண்ட்

உத்தரகாண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை பாஜக ஆட்சியைத் தக்கவைக்கவுள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சட்டமன்றத் தேர்தலில் பாஜக 45 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 34 சதவீத வாக்குகளையும், ஆம் ஆத்மி 15 சதவீத வாக்குகளையும், மற்ற கட்சியினர் 6 சதவீத வாக்குகளையும் பெறலாம் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

 

தொகுதி அடிப்படையில், பாஜக 42 முதல் 46 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 21 முதல் 25 இடங்களையும், ஆம் ஆத்மி 4 இடங்கள் வரையும் வெல்லலாம் என அந்தக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

 

மணிப்பூர்

மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியமைப்பதில் கடும் போட்டி ஏற்படும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அம்மாநில தேர்தலில் பாஜக 36 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 34 சதவீத வாக்குகளையும், நாகா மக்கள் முன்னணி 9 சதவீத வாக்குகளையும், மற்றவர்கள் 21 சதவீத வாக்குகளையும் பெறலாம் என கருத்துக்கணிப்பு கூறுகிறது.

 

மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியமைக்க 31 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 21 - 25 இடங்களையும், காங்கிரஸ் 18 முதல் 22 இடங்களையும், நாகா மக்கள் முன்னணி 4 - 8 இடங்களையும், மற்றவர்கள் 1 முதல் ஐந்து இடங்களையும் வெல்லும் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

 

கோவா

கோவா மாநிலத்தைப் பொறுத்தவரை பாஜக ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது. அம்மாநில தேர்தலில் பாஜக 38 சதவீத வாக்குகளையும், ஆம் ஆத்மி 23 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 18 சதவீத வாக்குகளையும், மற்ற கட்சியினர் 21 சதவீத வாக்குகளையும் பெறலாம் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 

சட்டமன்றத் தொகுதிகள் அடிப்படையில், பாஜக 24 முதல் 28 இடங்களையும், காங்கிரஸ் 1 முதல் 5 இடங்களையும், ஆம் ஆத்மி 3 முதல் 7 இடங்களையும், மற்றவர்கள் 4 முதல் 8 இடங்களையும் வெல்வார்கள் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

 

ஏபிபி - சி-வோட்டர்ஸின் கருத்துக்கணிப்பின்படி, தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சியமைக்கவுள்ளது. மேலும், மணிப்பூர் மாநிலத்திலும் அதிக இடங்களில் பாஜக வெல்லவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.