குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தனியார் விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிறுவர்கள் பெரியவர்கள் என மொத்தம் 27 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராஜ்கோட் பகுதியில் அமைந்துள்ள டிஆர்பி கேமிங் ஷோன் என்ற அந்த மைதானத்தில் இருந்த தற்காலிக கூடாரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் கூடாரத்திலிருந்த தீயானது மைதானத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதில் ஒன்பது சிறுவர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். இதில் பலர் அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல் கருகி உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
தற்பொழுது வரை இந்த விபத்திற்கான காரணம் தெரியாத நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் டெல்லி விவேக் விகார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.