நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடும் உயர்வை சந்தித்திருந்த நிலையில், கடும் வெங்காய தட்டுப்பாடும் நிலவி வருகிறதும். இந்த நிலையில் வெங்காயம் வாங்கும் போது ஏற்பட்ட சண்டையினால், கைகலப்பில் ஈடுபட்ட பெண்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ள சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் நேற்று நேஹா என்ற பெண் வெங்காயம் வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் வெங்காயத்தின் விலை குறித்து கடைக்காரரிடம் பேரம் பேசிகொண்டிருந்த போது, அவரது பக்கத்துக்கு வீடு பெண்ணான தீப்தி அங்கு வந்துள்ளார். தீப்தி வெங்காயம் விற்பவரிடம், “நேஹாவினால் வெங்காயம் வாங்க முடியாது. அவருக்கு அந்த அளவு வசதி இல்லை. எனவே அவரிடம் வெங்காயத்தை விற்று நேரத்தை வீணாக்காதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார். இதனால் தீப்தி மற்றும் நேஹா இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பு வரை சென்றுள்ளது.
இந்த நேரத்தில் அவர்கள் இருவர் உடன் இருந்த பெண்களும் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்த நேஹா, தீப்தி மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவர்களுக்கு ஜாமீன் கிடைத்ததையடுத்து அவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.