A father who hit his own daughter in uttar pradesh

உத்தரப் பிரதேசம் மாநிலம், குஷிநகர் மாவட்டம், நெபுவா நவுராங்கியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்நாராயண் சிங். இவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். அதில், இவரது கடைசி மகள் (16) அங்குள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.

Advertisment

இந்த நிலையில், தனது கடைசி மகளை மர்மநபர்கள் சிலர் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும், அதனை தடுக்க முயன்றபோது தனக்கு காயம் ஏற்பட்டதாகவும் ஜெய்நாராயண் சிங் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், வீட்டில் இருந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisment

அதில், ஜெய்நாராயண் சிங் மீது சந்தேகம் வரவே, போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, ஜெய்நாராயண் சிங் தான் தனது மகளை கொன்று நாடகமாடியுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இது குறித்து அவரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், ஜெய்நாராயண் சிங்குக்கும், அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் நீண்ட காலமாக நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெய்நாராயண் சிங், பக்கத்துக்கு வீட்டுக்காரரை பழிவாங்க துடித்துள்ளார். அதன்படி, கடந்த 1ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த தனது மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

இந்த கொலைச் சம்பவத்தில் தனது பக்கத்து வீட்டுக்காரரை சிக்க வைப்பதற்காகவே, தனது மகளை கொன்றுவிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து, ஜெய்நாராயண் சிங்கை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பக்கத்து வீட்டுக்காரரை பழி வாங்க தனது சொந்த மகளை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment