அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்பிக்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே சமயத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்த இரண்டு பெண்களும் வண்ண புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான இன்று இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கைது செய்யப்பட்ட நால்வரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நாடாளுமன்றத்துக்கு உள்ளே வண்ணப் புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மனோரஞ்சன், சாகர் ஷர்மா என்பதும் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீலம் (42) மற்றும் அமோல் ஷிண்டே(25) என்பதும் தெரியவந்தது. கைதான மனோரஞ்சனின் தந்தை கர்நாடகாவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இது தவறு. இந்த தவறை யாரும் இனிமேல் செய்யக்கூடாது. எனது மகன் ஏதாவது நல்லது செய்திருந்தால் நிச்சயமாக நான் அவரை ஆதரிப்பேன். ஆனால், அவர் ஏதாவது தவறு செய்திருந்தால் அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் இந்த சமூகத்திற்கு ஏதாவது தவறு செய்திருந்தால் அவரை தூக்கிலிடுங்கள்” என்று கூறினார்.