Skip to main content

வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்க முடியாது - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

farmers

 

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரி டெல்லியைச் சேர்ந்த ரிஷப் சர்மா, வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி, ரீபக் கன்சலின் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளனர். அந்த பொதுநல மனுவில், 'டெல்லியில் விவசாயிகள் அதிகளவில் கூடியுள்ளதால் கரோனா தொற்றுப் பரவல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சாலைகளை மறித்துப் போராடுவதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே டெல்லியில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தனர். 

 

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள், டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதைத் தடுத்தது யார்? சாலைகளை மூடியது யார்? என சரமாரி கேள்வி எழுப்பி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தனர். மேலும் இந்த வழக்கில் விவசாய சங்கங்கள் எதிர் மனுதாரர்களாக இணைய அனுமதி வழங்கி, வழக்கு விசாரணையை இன்று (17/12/2020) ஒத்திவைத்திருந்தனர்.

 

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, "எந்தவொரு சட்டத்திற்கும் எதிராகப் போராடுவது அரசியலைப்பு தந்துள்ள உரிமை. அதில் தலையிடமுடியாது. ஆனால் அவர்களின் போராட்டம் குடிமக்களைப் பாதிக்கக் கூடாது. விவசாயிகளின் போராட்டத்திற்குத் தீர்வு காணும் வகையில், சுதந்திரமான மற்றும் ஒரு பக்கச் சார்பற்ற குழு ஒன்றை அமைப்பது பற்றி யோசித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் தீர்வு எட்டப்படும் வரையில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடரலாம்" என்றார். 

 

மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும் வரையில், வேளாண் சட்டங்களை அரசு அமல்படுத்தாது என உத்தரவாதம் தர முடியுமா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு, வேளாண் சட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டால், விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டார்கள் எனத் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள், மீண்டும் டிசம்பர் 23 அல்லது 24 -ஆம் தேதி விசாரிப்பதாக அறிவித்துள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

“இந்த தீர்ப்பு எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கும்” - அமைச்சர் பொன்முடி

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
"This verdict will be a guide for everyone" - Minister Ponmudi

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் மறுத்திருந்தார். இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் ஆளுநருக்கு பல்வேறு கண்டனங்களையும் கேள்விகளையும் உச்சநீதிமன்றம் எழுப்பி இருந்தது. இத்தகைய சூழலில் இன்று (22.03.2024) பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்க ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்திருந்த நிலையில், பிற்பகல் 03.30 மணிக்கு பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் வந்தனர். முதல்வர் முன்னிலையில் பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடிக்கு அவர் ஏற்கெனவே வகித்து வந்த உயர் கல்வித்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டது.

"This verdict will be a guide for everyone" - Minister Ponmudi

பதவியேற்புக்குப் பின்னர் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நிணைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த சட்ட நடவடிக்கையின் காரணமாக சட்டப்பூர்வமாக இன்று (22.03.2024) அமைச்சர் பொறுப்பில் அமர்ந்துள்ளேன். இதனை யாரும் மறுக்க முடியாது. முதல்வருக்கும், வழக்கறிஞர்கள் இளங்கோ மற்றும் வில்சனுக்கும் உளமாற நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக இந்த தீர்ப்பு என்பது எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் மக்கள் ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சியின் தத்துவம் வறண்டு போவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. பல காலமாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழமையான மரபுகளையும் கை விட்டு வருவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். 2024 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது. நமது புகழ்பெற்ற தேசத்தை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.