கரோனாவால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) காலமானார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கரோனா பாதிப்பு காரணமாக, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், சுமார் ஒரு மாதமாக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று (06/02/2022) காலை 08.12 மணிக்கு மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது.
பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் குறித்து பார்ப்போம்!
1929- ஆம் ஆண்டு மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரில் பிறந்தவர் லதா மங்கேஷ்கர். பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இந்தி, தமிழ் உள்ளிட்ட 36 மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். 1955- ஆம் ஆண்டு தமிழில் வெளியான மொழிமாற்று படமான 'வானரதம்' படத்தில் முதலில் பாடியிருந்தார். கமலின் 'சத்யா' படத்தில் "வளையோசை கலகலவென..." என்ற பாடலைப் பாடியுள்ளார்.
பிரபு நடிப்பில் 'ஆனந்த்' படத்தில் பாடிய ஆராரோ பாடலும் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தது. இந்திய இசையுலகில் மெல்லிசை ராணியாக சுமார் அரை நூற்றாண்டு காலம் வலம் வந்தவர். இந்தியாவின் இசைக்குயில் என புகழ்பெற்றவர். கடந்த 2001- ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கர் ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். 1999- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2005- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் கடந்த 1989- ஆம் ஆண்டு லதா மங்கேஷ்கர் பெற்றிருந்தார்.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.