கடந்த 2023 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பெண் ஒருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் சிறையை விட்டு வெளியே வந்தஅவர்களுக்கு கார் அணிவகுப்புடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடகா மாநிலம் ஹாவேரி ஹனக்கல் பகுதியில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆண் நண்பருடன் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட ஹனக்கல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள்சிலர்சம்பந்தப்பட்ட ரெஸ்டாரண்ட்டுக்குள் சென்று அப்பெண்ணிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் ஆண் நண்பரை தாக்கிவிட்டு அந்த பெண்ணை கடத்திச் சென்ற அந்த இளைஞர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் வைத்து பலவந்தமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 17 பேர் இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நிலையில் இவர்களில் 10 பேர் ஜாமீனில் வந்து விட்டனர். இதில் சோயிப் முல்லா உள்ளிட்ட முக்கியமான ஏழு பேருக்கு தற்பொழுது ஹாவேரி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இத்தனை நாட்களாக சிறையில் இருந்தவர்கள் ஜாமீனில்வெளியே வந்த பொழுது அவர்களின் நண்பர்கள் கார் அணிவகுப்புடன் அவர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்துள்ளனர். இந்த வரவேற்பு தொடர்பான வீடியோ காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது. காரின் மேல் பகுதியில் திறந்தபடி நின்று கொண்டு கையை வானை நோக்கி ஏந்திய படி ஏதோ சுதந்திரப் போராட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பியது போன்று அவர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்ட காட்சிகள் அதிர்ச்சியையும், தலைகுனிவையும் ஏற்படுத்தியுள்ளது.