Skip to main content

உயிர்பயம்; 3 வருடங்களாக இருட்டில் வாழ்ந்த குடும்பம் - திடுக்கிடும் பின்னணி!

Published on 26/12/2022 | Edited on 26/12/2022

 

family lived inside for three years due to the fear of Corona

 

‘வெளில வந்தா நாங்க இறந்து விடுவோம்’ என்று பயந்து கொண்டு தாயும் மகளும் 3 ஆண்டுகளாக  வீட்டுக்குள் முடங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்றால் உலகின் பல்வேறு நாடுகள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்தது. பொதுமக்களும் தங்களது உயிரையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக அவர்களது வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். இந்நிலையில், ஆந்திராவில் நடந்த ஒரு வினோத சம்பவம் குறித்த காணொலி காண்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆந்திர மாநிலம், காக்கிநாடா பகுதிக்கு அருகே உள்ளது குய்யேரு கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சூரியபாபு. இவரது மனைவி கே.மணி. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பயம் காரணமாக வீட்டிலேயே முடங்கி இருந்துள்ளனர். அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸ் என்பது பில்லி சூனியம் போன்றது. அதை வைத்து தங்களை கொலை செய்துவிடுவார்கள் என்ற மூட நம்பிக்கையில் தாயும் மகளும் கடந்த 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே கதவைப் பூட்டிக்கொண்டு வாழ்ந்துள்ளனர். 

 

மேலும், ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் மட்டும் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காக வீட்டைவிட்டு வெளியே செல்வார்களாம். மற்றபடி, எந்த ஒரு விஷயத்துக்காகவும் அவர்கள் வெளியே வராமல் இருந்துள்ளனர். மணியின் கணவர் சூரியபாபு மட்டும் வெளியே சென்று உணவுப் பொருட்களை வாங்கி வந்து தன்னுடைய குடும்பத்திற்கு ஜன்னல் வழியாகக் கொடுத்து வந்துள்ளார்.

 

இதையடுத்து, மணி மற்றும் அவரது மகள்களின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துள்ளது. ஒருகட்டத்தில், சூரியபாபுவையும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. மேலும், இவர்களின் மோசமான நிலைமை தீவிரமடைவதை உணர்ந்த சூரியபாபு, உள்ளூர் அரசு மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் போலீஸாரின் உதவியை நாடினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸாரும் சுகாதாரத்துறை ஊழியர்களும் சூரியபாபுவின் வீட்டிற்கு வந்துள்ளனர்.

 

அப்போது தாயும் மகளும் உறவினர்கள் தங்களை கொலை செய்வதற்காக ஆட்களை அனுப்பி இருப்பதாகக் கூறி கதவைத் திறக்க மறுப்பு தெரிவித்தனர். பின்னர், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற அதிகாரிகள் அவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றிச் சென்று காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். கொரோனாவை பில்லி சூனியம் என நினைத்துக்கொண்டு ஒரு குடும்பமே வீட்டுக்குள் முடங்கிய சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Stone pelting on Jagan Mohan Reddy


ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது. இதனால் அங்கு தீவிர பரப்புரை அரசியல் கட்சிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

‘பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை; ஆனால் ஒரு கண்டிஷன்’ - சந்திரபாபு நாயுடு வாக்குறுதி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Chandrababu Naidu's promise Stipend for Backward People at lok sabha election campaign

மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதனால், அந்த மாநிலங்களிலும் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வருகிற மே 13ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது.

175 சட்டசபை தொகுதிகளும், 25 மக்களவைத் தொகுதிகளையும் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அனைத்து இடத்திலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதில், பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க 6 இடங்களிலும் போட்டியிட உள்ளது. மேலும், வாக்காளர்களைக் கவரும் விதமாக, அங்கு போட்டியிடும் கட்சிகள் வித விதமாக வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.

இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறியிருப்பதாவது, “பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக உயிர் துறந்த மகாத்மா ஜோதிராவ் பூலேவின் 197வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். ஜோதிராவ் பூலேவின் கனவுகள் நனவாக, தெலுங்கு தேசக் கட்சி ஆட்சி அமைந்ததும், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவோம். அதில், 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் மாதம் தோறும் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும்” என்று கூறினார். 

இவர் ஏற்கனவே, ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைந்தால், தரமானது மட்டுமன்றி, விலை குறைவாகவும் மதுபானம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.