Skip to main content

இது ரிசர்வ் பேங்க் ஆஃப்  இந்தியா இல்ல...சில்ட்ரன்ஸ் பேங்க் ஆஃப் இந்தியா...? - கடுப்பான வாடிக்கையாளர் 

Published on 27/10/2022 | Edited on 27/10/2022

 

Fake note ATM machine uttar pradesh

 

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டம் அருகே உள்ள முன்ஷிகஞ்ச் சாலையில்,  ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம்மில் கிஷன் விஷ்வகர்மா என்பவர் தீபாவளி செலவுக்காக 5,000 ரூபாய் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அந்த ஏடிஎம்மில் எடுக்கப்பட்ட பணத்தில் 2 கள்ள நோட்டுகள் இருந்துள்ளது. 200 ரூபாய் நோட்டில் ‘ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா’ (RESERVE BANK OF INDIA) என்று இருக்க வேண்டிய இடத்தில் சில்ட்ரன்ஸ் பாங்க்  ஆஃப்  இந்தியா (CHILDRENS BANK OF INDIA) என்று அச்சிடப்பட்டிருந்தது. மற்றொரு 200 ரூபாய் நோட்டில் ஃபுல் ஆஃப் ஃபன் (FULL OF FUN) என்ற வாக்கியம் இருந்துள்ளது.

 

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கிஷன் விஷ்வகர்மா, அருகில் இருந்தவர்களிடம் இந்த விஷயத்தை தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடியது. மேலும், அந்த 200 ரூபாய் கள்ள நோட்டுகளை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டார்.

 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஏடிஎம்மில் கள்ள நோட்டு வந்த விவகாரத்தை கிஷன் விஷ்வகர்மாவும் அங்கிருந்தவர்களும் போலீசாரிடம் விவரித்துள்ளனர். இதனையடுத்து, கள்ளநோட்டு சம்பந்தப்பட்ட வங்கியிடம் விசாரணை செய்யப்படும் என்றும் தீபாவளி விடுமுறை முடிந்து வங்கிகள் திறக்கப்படும்போது இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அங்கிருந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

 

அதன் பிறகு, அந்த ஏடிஎம்மில் பணம் எடுத்த கிஷன் விஷ்வகர்மா பேசும்போது  “ இந்த ஏடிஎம் இயந்திரம் ‘இந்தியா 1’ என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த ஏடிஎம்-மில் பணம் எடுத்த மற்றொரு நபருக்கும் கள்ள நோட்டுதான் வந்தது. இந்த சம்பவத்தில் தற்போது வரை வழக்குப்பதிவு செய்யவில்லை.” என கிஷன் விஷ்வகர்மா தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.