Skip to main content

“என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதை செய்துள்ளார்” - முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

Ex-minister Chandra Priyanka accuses husband

 

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் ஒரே ஒரு பெண் அமைச்சராக இருந்தவர் சந்திர பிரியங்கா. இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள். நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில்.. என். ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். பின்னர் இவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்ட நிலையில்.. போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலன் மற்றும் தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகள் வழங்கப்பட்டது. 

 

இந்நிலையில், அமைச்சர் சந்திர பிரியங்காவின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து முதலமைச்சர் ரங்கசாமி அவரை பதவி நீக்கம் செய்வதாக இருந்த நிலையில், சந்திர பிரியங்காவே தனது பதவியை ராஜினாமா செய்தார். தான் சாதி மற்றும் பாலின ரீதியில் தாக்கப்படுவதாக கூறி புதுச்சேரி அரசிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். புதுச்சேரியில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சந்திர பிரியங்காவின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவரது அலுவலகத்திற்கும் இரண்டு முறை சீல் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 

இத்தகைய சூழலில், முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்காவிற்கும் அவரது கணவர் சண்முகத்துக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இவர்கள் பிரிந்து தனி தனியாக வாழ்ந்து வருகின்றனர். மேலும், சந்திர பிரியங்காவின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதற்கும் குடும்ப பிரச்சனை தான் காரணம் என சொல்லப்படுகிறது. அதே வேளையில், சந்திர பிரியங்காவின் பதவி பறிக்கப்பட்ட நேரத்தில், கணவர் சண்முகம் சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தார்.

 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு.. சந்திர பிரியங்காவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது கணவர் சண்முகம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனது கணவர் சண்முகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி டி.ஜி.பி. ஸ்ரீநிவாசை சந்தித்து சந்திரபிரியங்கா புகார் அளித்துள்ளார். தற்போது, இதன் நீட்சியாக சந்திரபிரியங்கா, தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு காரைக்கால் குடும்பநல நீதிமன்றத்தில் கடந்த 6 ஆம் தேதியன்று மனு தாக்கல் செய்துள்ளார். 

 

மேலும், அன்றைய தினம் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் இருந்ததால் சந்திர பிரியங்காவே நேரில் வந்து குடும்பநல நீதிபதி அல்லி முன்பு ஆஜராகி மனு தாக்கல் செய்தார். அப்போது, அந்த மனுவில், “நான் வகித்துவந்த அமைச்சர் பதவியை வைத்து, கணவர் சண்முகம் பல்வேறு இடங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். அதனை தட்டி கேட்டதால் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி தன் அரசியல் வாழ்க்கையில் எழுச்சி பெறுவதை தாங்கிக்கொள்ளாமல் தன்னை கட்டுப்படுத்த முயற்சித்தார்.

 

மேலும், சண்முகம் ஒரு குடிகாரன், பெண் வெறியன் தனக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏராளமான சித்திரவதைகளை செய்துள்ளார். அதுமட்டுமின்றி, சொந்த மனைவியை பற்றி அவதூறு பரப்பும் ஒரு ஆணுடன் இனிமேல் வாழ வேண்டாம் என விவாகரத்து பெற முடிவு செய்துள்ளேன்” என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், முன்னாள் அமைச்சரான சந்திரபிரியங்காவுக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்டிருந்த மோதல் சம்பவம், தற்போது விவாகரத்து கேட்டு கோர்ட்டு வரை வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

- சிவாஜி

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.