Skip to main content

நேர்மையான பெண் அரசு அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்; அதிர்ச்சியில் தலைநகர்

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

female government official Prathima was incident in Bangalore

 

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி தாலுகாவில் அமைந்துள்ளது துடுகி கிராமம. இந்த பகுதியைச் சேர்ந்தவர் பிரதிமா. 37 வயதான இவர், கர்நாடக அரசின் கனிமவளம் மற்றும் நில அறிவியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்தார். பிரதிமாவுக்கும் தீர்த்தஹள்ளி பகுதியைச் சேர்ந்தவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், ஆரம்பத்தில் ஒற்றுமையாக வாழ்ந்த இவர்களது குடும்பத்தில் காலப்போக்கில் சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டு வந்துள்ளது.  இதனால், அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரதிமா கடந்த கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை விட்டு பிரிந்து தலைநகர் பெங்களூரில் தனியாக வசித்து வந்தார்.  

 

இதற்கிடையில், பிரதிமாவின் சகோதரரான பிரதீஷ் என்பவர் பெங்களூர் மாநகராட்சியில் காண்ட்ராக்டராக இருந்து வருகிறார். இதனால் பெங்களூரில் இருக்கும் தனது சகோதரி பிரதிமாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அதே வேளையில், கர்நாடக அரசு பணியில் இருக்கும் பிரதிமா மிகவும் நேர்மையானவர். பெங்களூருவில்‌ லைசென்ஸ் இல்லாமல் சட்‌டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரிகள்‌ மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்துவந்தார். மேலும், தமிழ்நாட்டுக்கு ஜல்லி கற்கள் ஏற்றிச் செல்வதை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதனால் இவருக்கு ஏகப்பட்ட எதிரிகள் இருந்ததாக சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில், கடந்த 4 ஆம் தேதியன்று பிரதிமா தனது அலுவலகத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். இதையடுத்து, பிரதிமாவின் அண்ணன் பிரதீஷ் வழக்கம்போல் தந்து தங்கையை செல்போனில் அழைத்து பேச முயன்றார். ஆனால், அவர் மூன்று முறை செல்போனில் அழைப்பு விடுத்தும் பிரதிமா எடுத்து பேசவில்லை. இதனால் காலையில் பேசி கொள்ளலாம் என பிரதீஷும் விட்டுவிட்டார். இதற்கிடையில், அடுத்த நாள் காலையும் பிரதிமா செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. ஒருகட்டத்தில், இதனால் சந்தேகமடைந்த பிரதீஷ்.. உடனடியாக சகோதரி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, அங்குள்ள ஒரு அறைக்குள் பிரதிமா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 

 

ஒருகணம், இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரதீஷ்.. தனது சகோதரியின் உடலை பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த பெங்களூரு போலீசார், கை ரேகை நிபுணர்களுடன் வந்து பிரதிபா கொலை செய்யப்பட்ட இடத்தில் தடயங்கள் சேகரித்தனர். அதன்பிறகு, பிரதிபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெங்களூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்.. மூன்று தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.  

 

அதே வேளையில், பிரதிபாவின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டிருப்பதும், அவரை ஒன்று அல்லது இரண்டு பேர் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என தெரிவித்தனர். அந்த நேரத்தில், போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி.. பிரதிபா அரசு வாகனத்தில் புதிய டிரைவர்தான் வந்து இறக்கிவிட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார்.. முன்னாள் டிரைவர் கிரண் என்பவரிடம் விசாரிக்க முயன்றபோது, அவர் பெங்களூரிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாமராஜநகருக்குத் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்.. டிரைவர் கிரணை அதிரடியாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். 

 

அப்போது, போலீஸ் விசாரணையில் அவர் சொன்ன தகவல்கள் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. கிரண் என்பவர் கொலை செய்யப்பட்ட பிரதிபாவின் முன்னாள் கார் டிரைவர். ஆரம்பத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட முரணால்.. கிரணை வேலையை விட்டு தூக்கிவிட்டு புதிய டிரைவரை பணியமர்த்தியுள்ளார். இதனால் கோபத்தில் இருந்த கிரண்.. சம்பவ நாள் அன்று பிரதிபா வீட்டுக்கு வந்து முறையிட்டுள்ளார். அப்போது, இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கிரண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரதிபாவை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

 

இதையடுத்து, கிரணிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைக்கு பிறகு அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதே நேரத்தில், கிரணின் வாக்குமூலத்தில் சில முரண்கள் இருப்பதாக போலீசார் உணருகின்றனர். அரசு அதிகாரி பிரதிபாவை கொலை செய்தது டிரைவர் கிரண் தானா? அல்லது ஏதேனும் கடத்தல் கும்பலா? அல்லது குடும்ப பிரச்சனையா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே வேளையில், பெண் அரசு அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டதற்கு.. அம்மாநில முதல்வர் சித்தராமையா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என  உறுதி அளித்துள்ளார். தற்போது, பெங்களூரில் பெண் அரசு அதிகாரி ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- சிவாஜி

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.